சுவிட்சர்லாந்தில் இணையத் தாக்குதல் குறித்து கட்டாய அறிவிப்பு விதி
சுவிட்சர்லாந்து, இணையத் தாக்குதல்கள் குறித்து கட்டாயமாக அறிவிக்க வேண்டும் என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தி ஆறு மாதங்கள் ஆன நிலையில், அதற்கான விளைவுகள் தென்படத் தொடங்கியுள்ளதாக தேசிய இணைய பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் முதல் இதுவரை, முக்கிய சேவை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து 164 இணையத் தாக்குதல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலானவை சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் அதிகம் பாதிக்கப்பட்ட துறை நிதித் துறையாகும்; மொத்த சம்பவங்களில் ஐந்தில் ஒரு பகுதி இத்துறையில்தான் இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பம், ஆற்றல் துறை ஆகியவை அதிக தாக்குதல்களை சந்தித்துள்ளன. சுகாதாரம், தொலைத்தொடர்பு மற்றும் அரசு துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தாக்குதல் முறைகளில், சேவையை முடக்குவதை குறிக்கோளாகக் கொண்ட Denial of Service தாக்குதல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. இது மொத்த சம்பவங்களில் 18 சதவீதமாகும். அதைத் தொடர்ந்து கணினி ஹேக்கிங், ரேன்சம்வேர் மற்றும் கடவுச்சொல் திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதிகாரிகள் தெரிவித்ததாவது, இவ்வாறு கட்டாய அறிவிப்பு வழங்கப்படுவது, தேசிய அளவில் அச்சுறுத்தல்களை முன்னரே கண்டறிந்து எச்சரிக்கை வழங்க உதவுகிறது. இதன் மூலம் விரைவான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் வழிவகுக்கிறது.
மேலும், இன்று முதல் இவ்விதியை மீறி தாக்குதல்களை அறிவிக்க தவறும் நிறுவனங்களுக்கு அதிகபட்சம் 1 லட்சம் சுவிஸ் பிராங்க் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
© WRS