கிரான்ஸ்-மொண்டானா தீ விபத்து: பிரான்ஸ் ஜனாதிபதி சுவிஸ் வருகை.!!
சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற பயங்கர மதுபான விடுதி தீவிபத்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், அந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தேசிய நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron சுவிட்சர்லாந்து செல்ல உள்ளார்.
சுவிட்சர்லாந்தின் வலைஸ் கன்டோனில் அமைந்துள்ள Crans-Montana என்ற பனிச்சறுக்கு சுற்றுலா நகரில், Le Constellation என்ற மதுபான விடுதியில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட தீவிபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள் என்பதுடன், இந்த சம்பவம் சர்வதேச அளவிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்து முழுவதும் தேசிய அளவில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வெள்ளிக்கிழமை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் சுவிட்சர்லாந்து வருகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்கதாக, இந்த தீவிபத்தில் உயிரிழந்த 40 பேரில் ஒன்பது பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக, பிரான்ஸ் அரசும் இந்த துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்கி வருகிறது. கிரான்ஸ்-மொண்டானா தீ விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.