க்ரான்ஸ்–மொன்டானா தீ விபத்து: ஐந்து ஆண்டுகளாக பாதுகாப்பு ஆய்வு இல்லை
சுவிட்சர்லாந்தின் Crans-Montana நகரில் இடம்பெற்ற பயங்கர தீ விபத்தில் 40 பேர் உயிரிழந்து, 116 பேர் காயமடைந்த நிலையில், அந்த விபத்துக்குள்ளான கேளிக்கை விடுதி கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்தவொரு பாதுகாப்பு ஆய்வுக்கும் உட்படுத்தப்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த தாமதம் ஏன் ஏற்பட்டது என்பதற்கான தெளிவான காரணத்தை தற்போது கூற முடியவில்லை என நகரின் மேயர் Nicolas Perrot தெரிவித்துள்ளார். நகர சபை இந்த விவகாரத்தில் ஆழ்ந்த வருத்தத்தில் இருப்பதாகவும், விதிமுறைகளின்படி ஆண்டுதோறும் நடைபெற வேண்டிய ஆய்வு நடைபெறாதது ஒரு பெரிய தவறு எனவும் அவர் ஒப்புக்கொண்டார். இந்த தவறுக்கான முழுப் பொறுப்பையும் நகர நிர்வாகம் ஏற்கிறது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.
இந்த தீ விபத்துக்கு காரணமாக கருதப்படும் ஸ்பார்க்லர்கள் இனி உள்ளூர் பொழுதுபோக்கு மையங்களில் முழுமையாகத் தடை செய்யப்படும் என மேயர் அறிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாம்பெயின் பாட்டில்களுடன் இணைக்கப்பட்ட ஸ்பார்க்லர்கள் மேல்சுவருக்கு மிக அருகில் தூக்கப்பட்டதால், மேல்சுவரில் இருந்த ஒலி தடுக்கும் ஃபோம் தீப்பற்றியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள 128 பொழுதுபோக்கு மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ள வெளியூர் தனியார் ஒப்பந்த நிறுவனம் நியமிக்கப்படவுள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. நகரில் 10,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை ஆய்வு செய்ய தற்போது ஐந்து பேர் கொண்ட குழு மட்டுமே உள்ளதாகவும், 2019க்கு பின்னர் ஏன் இந்த கேளிக்கை விடுதியில் ஆய்வு நடைபெறவில்லை என்பதற்கு தன்னிடம் பதில் இல்லை எனவும் மேயர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து பதவி விலகுவீர்களா என்ற கேள்விக்கு, தாம் பதவி விலகப் போவதில்லை என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். உள்ளாட்சி அதிகாரிகள் மீது குற்றவியல் விசாரணை நடைபெறுமா என்பது நீதிமன்றத்தின் முடிவைச் சார்ந்தது என்றும் அவர் விளக்கினார்.
விபத்து ஏற்பட்ட போது, அந்த கேளிக்கை விடுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான மக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த விடுதியின் அதிகபட்ச கொள்ளளவு 200 பேர் என்றும், இரண்டு தளங்களிலும் தலா 100 பேரை வெளியேற்றக்கூடிய அவசர வழிகள் இருந்ததாகவும் மேயர் தெரிவித்தார். ஆனால் அடித்தள அவசர வெளியேற்றம் முறையாக செயல்பட்டதா என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியாது எனவும் அவர் கூறினார்.
இந்த விபத்து தொடர்பாக Le Constellation கேளிக்கை விடுதியின் இரண்டு நிர்வாகிகள் மீது சுவிஸ் அரசுத் தரப்பு குற்றவியல் விசாரணையை தொடங்கியுள்ளது. அவர்கள் பிரெஞ்சு தம்பதியான ஜாக் மற்றும் ஜெசிகா மொரெட்டி என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.