ஜெனீவாவில் 3 மில்லியன் யூரோ மோசடி : பிரெஞ்சு குடும்பம் மீது விசாரணை
ஜெனீவா பகுதியைச் சேர்ந்த சுமார் 138 பேரிடம் இருந்து 3 மில்லியன் யூரோ வரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் உள்ள ஒரு பிரான்ஸ் குடும்பத்தின் மீது பிரான்ஸ் மற்றும் சுவிஸ் அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் குடும்பம் (“Bagdadi clan) “பக்தாதி க்ளான்” என்று அதிகாரிகள் இடையே அழைக்கப்படுகிறது.
2023 அக்டோபர் முதல் 2025 ஜூலை மாதம் வரை, பெரும்பாலும் முதியோர்களையே இலக்காகக் கொண்டு இந்த மோசடிகள் நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கி அதிகாரிகள் அல்லது போலீஸ் என தங்களை அறிமுகப்படுத்தி, போலி தொலைபேசி எண்கள் மூலம் அழைப்புகள் செய்யப்பட்டன. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் பயமடைந்து, தங்களின் வங்கி கார்டுகள் மற்றும் மதிப்புள்ள பொருட்களை போலி கூரியர் பணியாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த நெட்வொர்க்கில் ஈடுபட்டிருந்த சுமார் 100 பேர் வரை இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய சந்தேக நபர்களாகக் கருதப்படும் குடும்பத்தின் மூன்று உறுப்பினர்களும் கைதாகி 48 மணி நேர விசாரணைக்குப் பிறகு தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மோசடி பரவலாக நடைபெற்றிருப்பதால், சுவிஸ் மற்றும் பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர். மேலும் தொடர்புடைய நபர்கள் இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெனீவாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் முதியோர்களை குறிவைத்த தொலைபேசி மற்றும் இணைய மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த வழக்கு இரு நாடுகளின் பாதுகாப்புத்துறைகளுக்கும் முக்கிய சவாலாக உள்ளது.
© WRS