துர்காவ் ஹுட்ட்விலன் (Hüttwilen) பகுதியில் கார்–போஸ்ட் ஆட்டோ விபத்து: மூவர் காயம்
சுவிட்சர்லாந்தின் துர்காவ் (Thurgau) கன்டோனில் உள்ள ஹுட்ட்விலன் (Hüttwilen) பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட போக்குவரத்து விபத்தில், ஒரு கார் மற்றும் போஸ்ட் ஆட்டோ (Postauto) நேருக்கு நேர் மோதியதில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
நள்ளிரவு நேரத்தில், 22 வயதுடைய இளைஞர் ஒருவர் தனது காரை ஃப்ராயன்ஃபெல்டர் சாலையில் (Frauenfelderstrasse) ஹெர்டெர்ன் (Herdern) பகுதியிலிருந்து எஷென்ஸ் (Eschenz) நோக்கி செலுத்திக் கொண்டிருந்தார். இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கால்க்ரைன் (Kalchrain) பகுதியை கடந்த பின்னர், வழுக்கலான சாலையில் உள்ள வலது பக்க வளைவில் சென்றபோது, அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிர்ப்புற சாலைக்குள் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் எதிர்திசையில் வந்த போஸ்ட் பேரூந்துடன் கார் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரின் ஓட்டுநர் கடுமையாக காயமடைந்தார். அவரை ஃப்ராயன்ஃபெல்ட் தீயணைப்புப் படையினர் (Feuerwehr Frauenfeld) வாகனத்திலிருந்து மீட்டு வெளியேற்றினர். அவசர மருத்துவ சேவை மூலம் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், ரெகா (Rega) விமான ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

போஸ்ட் பேரூந்துவை இயக்கிய 52 வயதுடைய ஓட்டுநரும், அதில் பயணித்த 25 வயதுடைய பயணியொருவரும் லேசானது முதல் மிதமான அளவிலான காயங்களுடன் அவசர சேவை ஊழியர்களால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து நடந்த இடத்தில் துர்காவ் கன்டோனல் போலீசாரின் (Kantonspolizei Thurgau) குற்றவியல் தொழில்நுட்ப பிரிவு தடயங்களை சேகரித்தது. மேலும், தூர்-சீபாக் (Thur-Seebach) மற்றும் எஷென்ஸ் (Eschenz) பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்புப் படையினர் விபத்து விசாரணை மற்றும் பாதுகாப்புப் பணிகளில் உதவினர். விபத்து காரணமாக ஃப்ராயன்ஃபெல்டர் சாலை பல மணி நேரங்கள் மூடப்பட்டு, போக்குவரத்து மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டது.
இந்த விபத்தால் ஏற்பட்ட பொருளாதார சேதம் பல பத்தாயிரம் சுவிஸ் ஃப்ராங்குகள் (Swiss Francs) என மதிப்பிடப்பட்டுள்ளதாக துர்காவ் கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
© Kapo TG