சுவிஸ் ரயில்களில் அச்பெஸ்ட் மற்றும் ஆபத்தான பொருட்கள் சோதனை – ஐந்து மில்லியன் பிராங்க் ஒதுக்கீடு
சுவிட்சர்லாந்து கூட்டாட்சி ரயில்வே (SBB) நிறுவனம் தனது 400-க்கும் மேற்பட்ட ரயில்களை அச்பெஸ்ட் (Asbestos) மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்காக விரிவாக பரிசோதிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக நிறுவனம் சுமார் 50 லட்சம் சுவிஸ் பிராங்க் ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
SBB நிறுவனத்தின் பேச்சாளர் சுவிஸ் செய்தி நிறுவனம் Keystone-ATS க்கு தெரிவித்ததாவது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 1.4 மில்லியன் பிராங்க் நிபுணர் நிறுவனங்களின் ஆய்வுக்காகவும், மேலும் 3.5 மில்லியன் பிராங்க் சுத்திகரிப்பு மற்றும் ஆபத்தான பொருட்களை அகற்றுவதற்காகவும் பயன்படுத்தப்படும் என கூறினார். இதுகுறித்து ஜெர்மன் மொழி நாளிதழ் CH Media வெளியிட்ட செய்தியையும் அவர் உறுதிப்படுத்தினார்.
இத்தகைய ஆபத்தான பொருட்களின் பரிசோதனை பல ஆண்டுகளாக ரயில்வே துறையில் வழக்கமான செயல்முறையாக நடைபெற்று வருவதாக அவர் விளக்கினார். இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது, SBB இயக்குநர் விந்சன்ட் டுக்ரோ (Vincent Ducrot) “இது வெறும் வழக்கமான பரிசோதனை மட்டுமே. எந்த அச்பெஸ்ட் கசிவு அல்லது ஆபத்தும் இதுவரை கண்டறியப்படவில்லை,” என தெரிவித்தார்.

ரயில்வே நிர்வாகத்தின் தகவலின்படி, தற்போது பயணிகள் அல்லது ஊழியர்களுக்கு எந்தவித உடல்நல ஆபத்தும் இல்லை. அச்பெஸ்ட் பொருட்கள் சிதைந்துவிடாத வரை, அவற்றிலிருந்து நச்சு அல்லது வாயுக்கள் வெளியேற வாய்ப்பில்லை. மேலும், பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்படும் இடங்கள் பொதுப் பயணிகள் அணுக முடியாத பகுதிகளில் உள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் அச்பெஸ்ட் கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்துவது 1990 ஆம் ஆண்டிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளது. இது சிதைந்தபோது வெளிவரும் வாயுகள் மூச்சில் புகுந்தால், அது நுரையீரல் தொடர்பான தீவிர உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால், அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சுவிஸ் ரயில்வே தற்போது மேற்கொள்கின்ற இந்தப் பரிசோதனை, பழைய ரயில் வாகனங்களில் நீண்டகால பராமரிப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். இது சுவிஸ் பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிலைகளை மேம்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
© KeystoneSDA