வலைஸ் கன்டோனில் குடியேற்ற எதிர்ப்பு போஸ்டர் தடை
சுவிட்சர்லாந்தில் குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள ‘No to 10 million’ மக்களவை வாக்கெடுப்பை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள ஒரு பிரச்சார போஸ்டரை Valais கன்டோனல் அதிகாரிகள் தடை செய்துள்ளனர். இந்த போஸ்டரில் பயன்படுத்தப்பட்டுள்ள சின்னம் உண்மையான ‘நுழையத் தடை’ (Do not enter) சாலை அடையாளத்தைப் போன்றதாக இருப்பது காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த போஸ்டரின் உள்ளடக்கம் குறித்து அல்லாமல், அதில் இடம்பெற்றுள்ள சின்னம் வாகன ஓட்டிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதே முக்கிய காரணம் என Valais cantonal police தெரிவித்துள்ளது. குறிப்பாக, சாலையில் பயணிக்கும் போது ஓட்டிகள் இந்த போஸ்டரை உண்மையான போக்குவரத்து சின்னமாக தவறாக புரிந்து கொள்ளும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் Swiss People’s Party (SVP) கட்சியிடம், போஸ்டரை மாற்றி தெளிவாக வடிவமைக்குமாறு கன்டோனல் நிர்வாகம் கோரிக்கை வைத்தது. தற்போதைய வடிவில் இது சாலை பயனாளர்களை தவறாக வழிநடத்தக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனினும், அந்த மாற்றத்தைக் கட்சி நிராகரித்ததையடுத்து, வலைஸ் கன்டோன் முழுவதும் அந்த போஸ்டரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த SVP கட்சி, இந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அதுவரை, “தணிக்கை செய்யப்பட்ட படம்” என்ற குறிப்பு கொண்ட ஸ்டிக்கரை போஸ்டரில் ஒட்டி பிரச்சாரத்தை தொடருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் குடியேற்றம் மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு குறித்து நடைபெற்று வரும் அரசியல் விவாதங்களின் ஒரு பகுதியாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. ஜூன் 14ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த வாக்கெடுப்பு, நாட்டின் எதிர்கால குடியேற்றக் கொள்கையை தீர்மானிக்கும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.