கிரான்ஸ்–மொன்டானா தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 இலட்சம் ஃப்ராங்க் நிதியுதவி
சுவிட்சர்லாந்தின் Crans-Montana நகரில் அண்மையில் நிகழ்ந்த பெரும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உதவியாக 10 இலட்சம் சுவிஸ் ஃப்ராங்குகளை ஒதுக்குவதாக நகராட்சி அறிவித்துள்ளது. இந்த தொகை தற்போது அமைக்கப்பட்டு வரும் ‘கிரான்ஸ்–மொன்டானா தீ விபத்து பாதிக்கப்பட்டோர் உதவி அறக்கட்டளை’க்கு வழங்கப்படும் என உள்ளூர் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
உள்ளூர் பாரில் ஏற்பட்ட தீ விபத்து வேகமாக பரவி, 41 பேர் உயிரிழப்பதற்கும், மேலும் 115 பேர் காயமடைவதற்கும் காரணமாக அமைந்தது. இந்த சம்பவம் சுவிட்சர்லாந்து முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நகராட்சி மேற்கொண்டுள்ள இந்த நிதியுதவி நடவடிக்கை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஓரளவு ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த கிரான்ஸ்–மொன்டானா நகர மேயர் நிக்கோலாஸ் ஃபெரோ, “இந்த பணம் அவர்களின் துயரத்தை முழுமையாக நீக்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் இந்த கொடூரமான விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக நின்று, கிரான்ஸ்–மொன்டானா சமூகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன், ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் Valais கன்டோன், தனி அறக்கட்டளை ஒன்றின் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர்களுக்கும் உயிரிழந்த ஒவ்வொரு பாதிக்கப்பட்டவருக்கும் தலா 10,000 ஃப்ராங்க் அவசர நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
மேலும், Swiss government கூட இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளது. இருப்பினும், அந்த உதவியின் முழு விவரங்கள் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த தீ விபத்துக்குப் பிந்தைய நாட்களில், சுவிட்சர்லாந்து முழுவதும் பல தரப்புகளிலிருந்து ஆதரவு குரல்கள் எழுந்து வருவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீண்டகால உதவி வழங்க வேண்டிய அவசியம் குறித்தும் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. (AFP)