பெர்ன் நகரில் மத்திய கிழக்கு நிலவரம் தொடர்பாக பேரணி; போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிப்பு
ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் (Bern) நகரில், மத்திய கிழக்கு (Middle East) தற்போதைய நிலவரத்தை முன்னிறுத்தி, அதிகாரப்பூர்வ அனுமதியுடன் கூடிய ஒரு பொதுக் கூட்டமும் பேரணியும் 2026 ஜனவரி 31ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பெருந்தொகையான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பெர்ன் நகர மையப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க போக்குவரத்து இடையூறுகள் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பெர்ன் கன்டோனல் காவல் துறை, தெளிவாகக் காணக்கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் களத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரணியில் பங்கேற்பவர்கள் சுமார் மதியம் 2.00 மணி முதல் சுட்சென்மாட்டே (Schützenmatte) பகுதியில் கூடுவார்கள். அதன் பின்னர், போல்வெர்க் (Bollwerk), ஸ்பெய்சர்காசே (Speichergasse), வைசென்ஹவுஸ்பிளாட்ச் (Waisenhausplatz), நேகெலிகாசே (Nägeligasse), கோர்ன்ஹவுஸ்பிளாட்ச் (Kornhausplatz), கோர்ன்ஹவுஸ்பிருக்கு (Kornhausbrücke), விக்டோரியாபிளாட்ச் (Viktoriaplatz), விக்டோரியாரைன் (Viktoriarain) மற்றும் லோரெய்ன் வுறுக்க (Lorrainebrücke) வழியாக மீண்டும் சுட்சென்மாட்டே பகுதிக்கு பேரணி நடைபெற உள்ளது.

இந்த காரணத்தால், தனியார் வாகன போக்குவரத்தும் பொதுப் போக்குவரத்தும் சில பகுதிகளில் தற்காலிகமாக கட்டுப்படுத்தப்படும். குறிப்பாக பெர்ன் நகர மையத்தில் அதிகமான போக்குவரத்து நெரிசலும், குறுகிய நேரத்திற்கு சில சாலைகள் முழுமையாக மூடப்படும் சூழ்நிலையும் ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். போல்வெர்க் மற்றும் சுட்சென்மாட்டே பகுதிகள் பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 4.45 மணி வரை அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டிருக்கும்.
பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மாற்றுப் பாதைகள் குறித்து BERNMOBIL நிறுவனம் தனது இணையதளத்தில் தகவல் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்யுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மூலம்: பெர்ன் கன்டோனல் காவல் துறை