சுவிட்சர்லாந்து பள்ளிகளில் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கைக்கு வரம்பு கோரும் வலதுசாரிகள்
சுவிட்சர்லாந்தின் தொடக்கப் பள்ளிகளை “காப்பாற்றும்” நோக்கில், வலதுசாரி கட்சியான Swiss People’s Party (SVP) சனிக்கிழமை நடைபெற்ற தனது கட்சி ஒன்றுகூடலில் பல கோரிக்கைகள் அடங்கிய ஒரு தீர்மானத் தொகுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. இதில் முக்கியமான கோரிக்கையாக, ஒவ்வொரு வகுப்பிலும் வெளிநாட்டு மொழிப் பின்னணியைக் கொண்ட மாணவர்களின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு விதிக்க வேண்டும் என்பதைக் கட்சி முன்வைத்துள்ளது.
SVP-யின் நாடாளுமன்ற உறுப்பினரான Benjamin Fischer கூறுகையில், ஒரு வகுப்பில் வெளிநாட்டு மாணவர்கள் 20 சதவீதத்தை எட்டும்போது கற்பித்தல் கடினமாக மாறிவிடுகிறது என்றும், அந்த விகிதம் 30 சதவீதத்தை கடந்தால் கற்பித்தல் கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகி விடுகிறது என்றும் தெரிவித்துள்ளார். மொழித் தடைகள், கற்றல் வேகத்தில் வேறுபாடுகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்படும் கூடுதல் அழுத்தம் ஆகியவை இதற்குக் காரணமாக இருப்பதாகவும் அவர் வாதிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் குடியேற்றம் மற்றும் பலமொழி சமூக சூழல் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளில் ஒருங்கிணைப்பு, சமமான கல்வி வாய்ப்பு மற்றும் கற்பித்தல் தரம் குறித்த விவாதங்கள் தொடர்ச்சியாக எழுந்து வருகின்றன. SVP-யின் இந்த முன்மொழிவு, கல்வித் தரத்தை பாதுகாக்கும் முயற்சி என கட்சி விளக்கமளித்தாலும், இதற்கு எதிராக சில அரசியல் கட்சிகளும் கல்வி நிபுணர்களும், இது வெளிநாட்டு மாணவர்களை இலக்கு வைக்கும் பாகுபாடான அணுகுமுறை என விமர்சித்து வருகின்றனர்.
இந்த கோரிக்கைகள் எதிர்காலத்தில் சட்டமாற்றங்களாக மாறுமா என்பது குறித்து தற்போது தெளிவில்லை. இருப்பினும், சுவிட்சர்லாந்தின் கல்வி மற்றும் குடியேற்றக் கொள்கைகள் குறித்த அரசியல் விவாதங்கள் வரும் மாதங்களில் மேலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
©SDA