WEF மாநாட்டுக்கு எதிராக டாவோஸை நோக்கி போராட்ட நடைப்பயணம்
உலக பொருளாதார மன்றம் (WEF) ஆண்டுக் கூட்டம் சுவிட்சர்லாந்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 600 பேர் சுவிட்சர்லாந்தில் இரண்டு நாட்கள் நீடிக்கும் போராட்ட நடைப்பயணத்தை தொடங்கியுள்ளனர். தென்கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள க்யூப்லிஸ் (Küblis) பகுதியில் இருந்து சனிக்கிழமை புறப்பட்ட இந்தப் பேரணி, கிரௌவுண்டன் (Graubünden) கன்டோனில் உள்ள டாவோஸ் (Davos) நகரை நோக்கி நகர்ந்தது.
மூலதனவாதத்திற்கு முடிவு கட்ட வேண்டும், போர்களால் தீவிரமடையும் காலநிலை மாற்றத்தை தடுக்க வேண்டும், மக்களின் தேவைகளை மையமாகக் கொண்ட ஜனநாயக பொருளாதார அமைப்பு உருவாக வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.“WEF ஆதிக்கத்திற்கு எதிராக ஜனநாயகம் போன்ற வாசகங்கள் பதாகைகளில் இடம்பெற்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அடுத்த வாரம் நடைபெறும் WEF மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதே இந்தப் போராட்டத்திற்கு கூடுதல் கவனம் பெற்றுத்தந்துள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர். மாலி நாட்டைச் சேர்ந்த விவசாயியும் சமூக செயற்பாட்டாளருமான மாசா கோனே (Massa Koné), “WEF தனது முக்கியத்துவத்தை இழந்துவிட்டது; உலகம் முழுவதும் வறுமையும் சமத்துவமின்மையும் அதிகரித்து வருகிறது” எனக் கூறினார்.
இந்தப் பேரணியில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, இங்கிலாந்து, ஸ்பெயின், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். ஞாயிற்றுக்கிழமை டாவோஸ் நகரை அடையும் போராட்டக்காரர்கள், அங்கு நடைபெறவுள்ள அதிகாரப்பூர்வ WEF எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இணைந்து பங்கேற்க உள்ளனர்.
© KeystoneSDA