பாசல் பகுதியில் மோசடி தொலைபேசி அழைப்புகள் அதிகரிப்பு: காவல் துறை எச்சரிக்கை
பாசல் பகுதியில் சமீப காலமாக மோசடி தொலைபேசி அழைப்புகள் அதிகரித்து வருவதாக பாசல்-ஷ்டாட் கன்டோனல் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அழைப்புகளின் பின்னணி நோக்கம், பாதிக்கப்பட்டவர்களை திட்டமிட்ட முறையில் ஏமாற்றி, அவர்களது பணம் அல்லது முக்கியமான தனிப்பட்ட தகவல்களை கைப்பற்றுவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த மோசடி நடவடிக்கைகள் பல்வேறு வடிவங்களில் நடைபெற்று வருகின்றன. சில நேரங்களில் அழைப்பாளர்கள் வங்கி ஊழியர்களாக நடித்து பேசுகின்றனர். சில வேளைகளில் வரி திருப்பிச் செலுத்தப்படும் என்றும், அல்லது காப்பீட்டு தொகை வழங்கப்பட இருப்பதாகவும் கூறி மக்களை நம்ப வைக்க முயல்கிறார்கள். எல்லா சந்தர்ப்பங்களிலும், தொடர்பு கொள்ளப்படும் நபர்கள் தங்களது நலனுக்காகவே செயல்படுவதாக நம்பி உடனடி முடிவெடுக்குமாறு அழுத்தப்படுகின்றனர்.
இந்தச் செயல்முறைகளின் போது, மோசடியாளர்கள் வங்கி கணக்கு விவரங்கள், கடன் அட்டை தகவல்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைப் பெற முயல்கின்றனர். சில சமயங்களில், மின்னஞ்சல் மூலம் நடைபெறும் பிஷிங், தொலைபேசி வழி விசிங் மற்றும் குறுஞ்செய்தி மூலம் நடைபெறும் ஸ்மிஷிங் ஆகிய முறைகள் (Phishing (E-Mail), Vishing (Telefon) und Smishing (SMS) ஒன்றாக இணைத்து பயன்படுத்தப்படுவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
இத்தகைய மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, தொலைபேசியில் யாரேனும் அழுத்தம் கொடுத்தால் உடனடியாக அழைப்பை நிறுத்த வேண்டும் என்றும், அழைப்பாளரின் அடையாளம் குறித்து சந்தேகம் ஏற்பட்டால் உரையாடலை தொடரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கி விவரங்கள், கடவுச்சொற்கள், பாதுகாப்புக் குறியீடுகள் அல்லது கடன் அட்டை எண்கள் போன்ற எந்த தகவல்களையும் தொலைபேசியில் பகிரக்கூடாது எனவும் காவல் துறை வலியுறுத்தியுள்ளது. மேலும், அழைப்பில் கூறப்படும் எண்களை பயன்படுத்தி மீண்டும் தொடர்பு கொள்ளாமல், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தொலைபேசி எண்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

மோசடியாளர்கள் தொலைபேசி அடைவுகளில் உள்ள தகவல்களையும் பயன்படுத்துவதால், தேவையற்ற விவரங்களை அகற்றுவது அல்லது பெயரை குறுக்கெழுத்தாக மாற்றுவது பாதுகாப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி அழைப்பின் மூலம் கூறப்படுவதற்காக, செல்போன் அல்லது கணினியில் எந்த செயலிகளையும் அல்லது மென்பொருட்களையும் நிறுவக் கூடாது என்றும், குறிப்பாக முதியவர்கள் மற்றும் தனியாக வசிப்பவர்களுக்கு இத்தகைய மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த மோசடி முயற்சிகள் தொலைபேசியுடன் மட்டுமல்லாமல், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகளின் மூலமாகவும் அதிகரித்து வருவதால், அறியாத அனுப்புநர்களிடமிருந்து வரும் இணைப்புகளை திறக்கக் கூடாது என்றும், இணைப்புகள் வழியாக திறக்கப்படும் இணையதளங்களில் எந்தவிதமான ரகசிய தகவல்களையும் உள்ளிடக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் மோசடிக்கு ஏற்கனவே உள்ளானதாக சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட சேவைகளின் கடவுச்சொற்களை மாற்றி, தங்களது நிதி நிறுவனத்தை தகவலறியச் செய்ய வேண்டும் என்றும், சந்தேகமான அழைப்புகள் மற்றும் செய்திகளை உடனடியாக காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© Kantonspolizei Basel-Stadt