க்ரான்ஸ்-மொன்டானா தீ விபத்து உயிரிழப்புகளுக்கு ஜனவரி 9 அன்று சுவிட்சர்லாந்து முழுவதும் தேசிய துக்க நாள்
க்ரான்ஸ்-மொன்டானாவில் புத்தாண்டு இரவில் நிகழ்ந்த பார்த் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், வரும் ஜனவரி 9 ஆம் தேதி தேசிய துக்க நாளாக அனுசரிக்க சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது. இந்த துக்க நாள் ஏற்பாடு தேவாலயங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படுவதாக, சுவிட்சர்லாந்து அதிபர் Guy Parmelin, ஞாயிற்றுக்கிழமை SonntagsBlick நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, ஜனவரி 9 அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, சுவிட்சர்லாந்து முழுவதும் உள்ள தேவாலயங்களில் மணி ஒலிக்கச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நாடு முழுவதும் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் அனுசரிக்கப்படும். இந்த அமைதியான தருணத்தின் மூலம், சுவிட்சர்லாந்து மக்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் இந்த பேரழிவில் உயிரிழந்தவர்களை நினைவுகூர முடியும் என அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு நிமிட மௌன அஞ்சலியும் தேவாலய மணி ஒலிப்பதும், க்ரான்ஸ்-மொன்டானாவில் நடைபெறும் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியுடன் ஒரே நேரத்தில் நடைபெறும். தீ விபத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் அதிகாரப்பூர்வ நினைவு நிகழ்ச்சி ஜனவரி 9 அன்று நடைபெறும் என்றும், அதில் சுவிஸ் அதிபர் உட்பட மத்திய அரசின் அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்றும் அந்த நகராட்சி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் துயரமாக மாறிய இந்த சம்பவம் சுவிட்சர்லாந்து முழுவதும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேசிய துக்க நாள் அறிவிப்பு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாகவும், நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
© KeystoneSDA