சுவிட்சர்லாந்தில் காய்ச்சல் பரவல் தீவிரம்: ஒரே வாரத்தில் 22% உயர்வு
ஆண்டின் கடைசி வாரத்தில் Switzerland மற்றும் லீக்டென்ஸ்டைன் (Liechtenstein) ஆகிய நாடுகளில் ஆய்வகங்களில் உறுதிப்படுத்தப்பட்ட காய்ச்சல் (இன்ஃப்ளூயன்சா) நோயாளிகள் எண்ணிக்கை 2,900 ஆக பதிவாகியுள்ளது. இதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில், காய்ச்சல் பாதிப்பு சம்பவங்கள் கிட்டத்தட்ட 22 சதவீதம் உயர்ந்துள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிந்தைய நாட்களில், சுவிட்சர்லாந்தின் பொதுச் சுகாதார அலுவலகமான FOPH வெளியிட்ட தகவலின்படி, 100,000 மக்களுக்கு சராசரியாக 31.90 காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நாட்டில் குளிர்கால காய்ச்சல் பரவல் வேகமாக அதிகரித்து வருவது தெளிவாகிறது.
கன்டோன்கள் வாரியாகப் பார்க்கும்போது, (பாசல்-ஸ்டாட்) Basel-Stadt கன்டோனில் 100,000 மக்களுக்கு 59.59 சம்பவங்கள் பதிவாகி, அதிக பாதிப்பு உள்ள பகுதியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து (ஜூரா) Jura கன்டோனில் 53.45 மற்றும் (ஷாஃப்ஹவுசன்) Schaffhausen கன்டோனில் 51.88 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மறுபுறம், (ஓப்வால்டன்) Obwalden கன்டோனில் 100,000 மக்களுக்கு 5.04 சம்பவங்கள் மட்டுமே பதிவாகி, குறைந்த பாதிப்பு கொண்ட பகுதியாக உள்ளது. இதேபோல் (அப்பென்செல் இனர்ரோடன்) Appenzell Innerrhoden (5.98) மற்றும் (அப்பென்செல் அவ்சர்ரோடன்) Appenzell Ausserrhoden (12.34) கன்டோன்களிலும் காய்ச்சல் சம்பவங்கள் குறைந்த அளவிலேயே காணப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் சுவிட்சர்லாந்தில் இன்ஃப்ளூயன்சா பரவல் அதிகரிப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட திடீர் உயர்வு சுகாதார வட்டாரங்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக வயோதிபர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தடுப்பூசி, சுத்தம் மற்றும் கூட்டமான இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவை காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© KeystoneSDA