வோட் கன்டோனில் பறவைக் காய்ச்சல் உறுதி: இவோர்னில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்
சுவிட்சர்லாந்தின் வோட் கன்டோனில் உள்ள இவோர்ன் பகுதியில் கடந்த சனிக்கிழமை மூன்று அன்னப்பறவைகள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில், அவை பறவைக் காய்ச்சல் எனப்படும் அவியன் இன்ஃப்ளூயன்சா காரணமாக உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கன்டோனின் கால்நடை மருத்துவர் உள்ளூர் அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமைப்படுத்த உத்தரவிட்டுள்ளார் என வோட் கன்டோன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அன்னப்பறவைகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உடனடியாக கட்டுப்பாட்டு மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு பகுதிக்குள், கடந்த நவம்பர் இறுதியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் கால்நடை விவகாரங்களுக்கான மத்திய அலுவலகம் வெளியிட்டிருந்த தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. வீட்டில் வளர்க்கப்படும் கோழி வகைகள் மற்றும் காட்டு பறவைகள் இடையே எந்தவித தொடர்பும் ஏற்படாத வகையில் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இதன் அடிப்படையில், கோழிகளை வளர்ப்பவர்கள், காட்டு பறவைகள் நுழைய முடியாத வகையில் வலைகள், கம்பிகள் அல்லது பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய வெளிப்புற இடங்களில் மட்டுமே அவற்றை வளர்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. இது சாத்தியமில்லாத நிலையில், கோழிகள் அடைக்கப்பட்ட கொட்டகைகளில் வைத்தே பராமரிக்கப்பட வேண்டும்.

இந்த புதிய விதிமுறைகள் பொதுவாக 50 அல்லது அதற்கு மேற்பட்ட கோழிகள் உள்ள பண்ணைகளுக்கு பொருந்தும் என்றாலும், இவோர்ன் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மண்டலத்தில் 50-க்கு குறைவான கோழிகள் உள்ள சிறிய பண்ணைகளுக்கும் இந்த நடவடிக்கைகள் பொருந்தும் என வோட் கன்டோன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கோழி வளர்ப்பாளர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். வீட்டுப் பறவைகளில் திடீர் மூச்சுத் திணறல், முட்டை உற்பத்தி குறைவு, உணவு அல்லது தண்ணீர் உட்கொள்ளும் அளவு குறைதல், அல்லது இறப்பு விகிதம் அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக கால்நடை மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் வோட் கன்டோன் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுவது மிக அரிது என்பதால், கோழி இறைச்சி மற்றும் முட்டை போன்ற உணவுப் பொருட்களை எந்த அச்சமும் இன்றி பயன்படுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.