பேர்னில் திருடப்பட்ட மூன்று கார்கள் நியூனெபூர்க் மற்றும் வாட் கன்டோன்களில் தடுத்து நிறுத்தம்: இளைஞர்கள் கைது
சுவிட்சர்லாந்தின் பேர்ன் கன்டோனில் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று வாகனங்கள் சனிக்கிழமை காலை நியூனெபூர்க் (Neuenburg) மற்றும் வாட் (Waadt/Vaud) பகுதிகளில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டன. சம்பந்தப்பட்ட மூன்று இளைஞர்களும் தற்போது காவலில் உள்ளனர்.
இந்தச் சம்பவம் 2025 டிசம்பர் 6 ஆம் தேதி காலை சுமார் 8.25 மணிக்கு நடந்தது. பேர்ன் கன்டோன் போலீஸ் ரோந்துப் படை A1 நெடுஞ்சாலையில், விலியோ றோல்ரிக்கன் (Wileroltigen) பகுதியில், கேர்ஸ்சஸ் (Kerzers) நோக்கி செல்கையில், அதிக திறன் கொண்ட என்ஜின்களுடன் வேகமாக ஓடிய மூன்று வாகனங்கள் அவதானத்திற்கு வந்தன. காவல்துறையினர் பின்தொடர முயன்றபோதும், அதிகப்படியான வேகத்தால் அந்த துரத்தல் நிறுத்தப்பட்டது. பின்னர் வாகனங்கள் Avenches நோக்கி தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் செய்யப்பட்ட ஆரம்ப விசாரணையில், பேர்னில் சமீபத்தில் திருடப்பட்டதாக தகவல் வந்த மூன்று கார்கள் இவைதான் என உறுதி செய்யப்பட்டது. பல கன்டோன்களின் காவல்துறை இணைந்து செயல்பட்டதால், சந்தேகத்துக்குரிய ஓட்டுநர்கள் நியூனெபூர்க் மற்றும் வாட் பகுதிகளில் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் பேர்ன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, வாகனங்கள் பாதுகாப்பாக பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களின் வயது 18 மற்றும் 24 ஆகும். இவர்கள் மீது வாகனத் திருட்டு மற்றும் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், இவர்கள் பிற வாகனத் திருட்டுகளில் தொடர்பு உள்ளவர்களா என்பது குறித்து விசாரணை தொடர்கிறது.
இந்த நடவடிக்கையில் பேர்ன், பிரெய்புர்க், நியூனெபூர்க் மற்றும் வாட் கன்டோன்களின் காவல்துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டன. சுவிஸ் காவல்துறை துரிதமான ஒத்துழைப்பும் தொழில்நுட்ப கண்காணிப்பும் சமீப காலத்தில் வாகனத் திருட்டு சம்பவங்களை குறைக்க முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
© Kantonspolizei Bern