பழ மரங்கள் கொண்ட காடுகள்: சுவிஸ் நகரமொன்றின் அருமையான திட்டம்
பொதுவாக காடுகளில் மரங்கள் இருக்கும். ஆனால், அவற்றில் மனிதர்கள் பழங்கள் பறித்து உண்ணும் வகையிலான பழ மரங்கள் எவ்வளவு இருக்கும் என்று உறுதியாகக் கூறமுடியாது.
இந்நிலையில், முழுவதும் உண்ணத்தக்க பழங்கள் கொண்ட பழ மரக் காடு ஒன்றை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது சுவிஸ் நகரம் ஒன்று.
பழ மரங்கள் கொண்ட காடுகள்
2023ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தின் Neuchâtel மாகாணத்திலுள்ள La Chaux-de-Fonds நகரில் பருவநிலை மாற்றம் முதல், புயல் வரையிலான பலவேறு காரணங்களால் ஏராளம் மரங்கள் நாசமாகின. அந்த இழப்பை ஈடு செய்வதற்காக, 2024ஆம் ஆண்டு, சிறிய காடுகளை உருவாக்கும் நோக்கில், பருவ நிலை மாற்றங்களை சமாளிக்கும் வகையிலான உயரமான மரங்களை நடும் முயற்சி ஒன்று துவக்கப்பட்டது.

அந்த முயற்சியின் வெற்றியைக் கண்ட Les Jardins du Mycélium என்னும் அமைப்பு, மக்கள் உண்ணத்தக்க பழங்களைக் கொண்ட பழ மரக் காடு ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளது. அவ்வகையில், இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம், 25, 26 திகதிகளில், 25 ஆப்பிள், வால்நட், ப்ளம் மற்றும் பேரிக்காய் மரங்களை நட Mycélium அமைப்பு முடிவு செய்துள்ளது.
அத்துடன், அடுத்த மாதம், உண்ணத்தக்க பெர்ரி வகை பழ மரங்கள், புதர்கள் ஆகியவை நடப்பட உள்ளன. இப்படியே அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மரங்கள் நடப்பட உள்ள நிலையில், இந்த காடுகளில் உள்ள மரங்களில் பழுக்கும் பழங்களை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் பறித்து உண்ண அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.