சுவிஸில் புலிகள் ஆதரவாளர்களுக்கு எதிர்ப்பு! ஐ.நாவில் முக்கிய கோரிக்கை
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தின் முன்னால் புலிகளின் ஆதரவாளர்கள் குழுவினால் நடத்தப்பட்ட பாரிய போராட்டத்திற்கு இலங்கை அமைப்பொன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதிகளைச் சந்தித்து அந்த அமைப்பு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் வசிக்கும் இலங்கையர்களின் கூட்டணியான ‘அரியகம்மட்டான’ என்ற அமைப்பே இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
தேரரின் கோரிக்கை
அதன்போது, இலங்கையில் சிங்களவர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க ஐக்கிய நாடுகள் சபையை உண்மையைக் கண்டறியும் ஆணையத்தை நியமிக்குமாறு அமைப்பின் தலைவரான கே. அரியமக்க தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, ஐ.நா பிரதிநிதிகள் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாகவும், அத்தகைய ஆணையத்தை அமைப்பதற்குத் தேவையான நடைமுறைகளைத் தொடங்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மனித உரிமை மீறல்கள்
மேலும், இந்த விவகாரம் குறித்து மேலும் விரிவாக விளக்க, அரியமக்க தேரர் ஒக்டோபர் 13 வெள்ளிக்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்ற உள்ளதாகவும் தெரியவருகிறது.
கடந்த போர் காலத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, புலிகளின் ஆதரவாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த நிலையில், மேற்கண்ட எதிர்ப்பு கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்களவர்களின் இந்த நடவடிக்கை ஐ.நாடுகளின் கூட்டத்தொடரில் தமிழர் தரப்பினால் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிராக எவ்வித சாதகமாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவிடக்கூடாது என்பதற்கான திசைதிருப்பும் செயற்பாடாகவே தேசிய செயற்பாட்டாளர்களால் பார்க்கப்படுகின்றது.
தமிழர்களின் தொடர்ச்சியான இந்த எதிர்ப்புகள் காரணமாக தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ள இலங்கையின் புதிய அரசு சற்று பதட்டத்தில் இருப்பதாகவும் உணர்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.