சுவிட்சர்லாந்தில், வீட்டு வாடகை அதிகரிக்கக்கூடும் என சுவிஸ் ஃபெடரல் வீட்டு வசதித்துறை அலுவலகம் எச்சரித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ஏற்கனவே மக்கள் அதிகரித்துவரும் வீட்டு வாடகையால் அவதியுற்றுவருகிறார்கள்.
இந்நிலையில், வீட்டு வாடகை, ஆண்டுக்கு 3 முதல் 5 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சுவிஸ் ஃபெடரல் வீட்டு வசதித்துறை அலுவலகம் எச்சரித்துள்ளது.
வீடுகளைக் கட்டி வாடகைக்கு விடுவதை பலரும் ஒரு முதலீடாகக் கருதுகிறார்கள். அதாவது, அது அவர்களுக்கு வருவாய் ஈட்டும் ஒரு விடயமாகிவிடுகிறது. அத்துடன், சுவிட்சர்லாந்தில் கட்டுமான நிலத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், புதிய வீடுகள் கட்டுவதில் பிரச்சினை ஏற்படுகிறது.

வீடுகளுக்கான தேவை அதிகரிப்பதால், வீட்டு வாடகைகளையும் உரிமையாளர்கள் உயர்த்துகிறார்கள். இன்னொரு விடயம், வீடு கட்ட உரிமம் பெறுவதில் உள்ள பிரச்சினைகள். அதாவது, புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்கு எதிர்ப்பும், அது தொடர்பில் செய்யப்படும் மேல்முறையீடுகளும், வீடுகள் கட்டுவதற்கு உரிமம் பெறுவதில் பிரச்சினையை ஏற்படுத்துவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.
ஆக, புதிதாக வீடுகள் கட்டப்படாத நிலையில், வீடுகள் வாடகை அதிகரித்துக்கொண்டே செல்லத்தான் வாய்ப்புள்ளது. குறிப்பாக, புதிதாக வாடகை வீடுகளில் குடிபுகுவோரும், வீடு மாற்றுவோரும் அதிக வாடகையை எதிர்கொள்ள நேரிடும் என்கிறார் ஃபெடரல் வீட்டு வசதித்துறை அலுவலக அதிகாரி ஒருவர்.