ப்ரீன்ஸ் மலைப்பகுதியில் மண்சரிவு அபாயம்: ஆல்புலா/ஆல்வ்ரா நகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
கிறாவ்வுன்டன் கன்டோனில் உள்ள ஆல்புலா/ஆல்வ்ரா நகராட்சி அதிகாரிகள், ப்ரீன்ஸ் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சுமார் 10,000 கன மீட்டர் பாறைகள் சரிவு காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை மூடுவதை உள்ளடக்கியவை.
ஞாயிற்றுக்கிழமை மண்சரிவு, ப்ரீன்ஸ் கிராமத்தை அடையவில்லை என்றாலும், வீடுகளை அபாயப்படுத்தும் மண்-பாறை குவியலின் இயக்கத்தை பெருமளவு துரிதப்படுத்தியுள்ளது. ஈரமான மண்ணின் காரணமாக, விழக்கூடிய பொருட்கள் இதுவரை எதிர்பார்க்கப்பட்டதை விட ஆழமாக கிராமத்தை நோக்கி சரிய வாய்ப்புள்ளதாக ஆல்புலா/ஆல்வ்ரா நகராட்சி இன்று தெரிவித்துள்ளது. இதனால், ப்ரீன்ஸ்/ப்ரின்சாவுல்ஸ் கிராமம் முழுவதும் புதைந்துவிடும் அபாயம் உள்ளது.
இப்பகுதியில் பாறை வீழ்ச்சிகள் அசாதாரணமல்ல, ஆனால் இம்முறை சரிவு வேகம் குறுகிய காலத்தில் இரட்டிப்பாகி, ஒரு நாளைக்கு 46 சென்டிமீட்டராக உயர்ந்துள்ளது.

அடுத்த கட்டத்திற்கு முன்னெச்சரிக்கை தயாரிப்பு
வல்லுநர்கள், அனைத்து சுற்றியுள்ள போக்குவரத்து மற்றும் பயண வழிகளை மூடுவதை உள்ளடக்கிய நடவடிக்கைகளுக்கு தயாராகுமாறு அதிகாரிகளுக்கு பரிந்துரைத்துள்ளனர்.
நேற்று காலை முதல், கன்டோன் தொழில்நுட்ப அலுவலகமும், ரெடிக் ரயில்வேயும் கன்டோன் சாலைகளிலும் ஆல்புலா ரயில் பாதையிலும் சிக்னல் விளக்குகளை செயல்படுத்தியுள்ளன. பொருட்கள் சரிந்தால், டீஃபன்காஸ்டல் முதல் சுராவா மற்றும் லென்சர்ஹைட் வரையிலான சாலைகளும், ஆல்புலா ரயில் பாதையும் உடனடியாக மூடப்படும்.
மேலும், டீஃபன்காஸ்டல் மற்றும் சுராவா இடையே ஆல்புலா ஆற்றின் இடது புறத்தில் உள்ள நடைபாதை மற்றும் சைக்கிள் பயணத்திற்கு தடை விதிக்கப்படும். ஆல்புலா ஆற்றின் இடது கரையில் உள்ள மலைப்பயண பாதையையும் மூடுவதற்கு நகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது.