அடுக்குமாடி குடியிருப்பில் ஆயுதங்கள் கண்டெடுப்பு : போலீசாரை அதிர வைத்த நபர்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் பல வீடுகளுக்கு பார்சல் வெடிகுண்டுகள் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டபோது ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருட்களும் கிடைத்துள்ளன.
ஜெனீவாவில், Patek Philippe என்னும் கைக்கடிகார நிறுவனம் உள்ளது. அந்நிறுவனம் மீது கடந்த சில ஆண்டுகளாக துன்புறுத்தல் மற்றும் தொல்லைகொடுத்தல் புகார்கள் அளிக்கப்பட்டுவருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், அந்த நிறுவனத்தின் பணியாளர்களின் வீடுகளுக்கு பார்சல் வெடிகுண்டுகள் அனுப்பப்பட்டன. அந்த நிறுவனத்தை மிரட்டுவதற்காகவே இந்த பார்சல் வெடிகுண்டுகள் அனுப்பப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
வெடிகுண்டுகளை அனுப்பிய நபரை பொலிசார் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், 60 வயதான அந்த நபர் துபாய்க்கு தப்பிச் செல்ல முயலும்போது பொலிசாரிடம் சிக்கினார். அதைத் தொடர்ந்து, அவரது வீட்டை பொலிசார் சோதனையிட்டனர்.
அப்போது, அவரது வீட்டில் ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.