பிரபல சுவிஸ் கைக்கடிகார தொழிற்சாலை ஒன்றிற்குள் நுழைந்த திருடர்கள் சிலர், அங்கிருந்த பணியாளர்களை மிரட்டி, அரிய உலோகங்கள் சிலவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள்.
சுவிட்சர்லாந்திலுள்ள Le Locle என்னுமிடத்தில் பிரபல சுவிஸ் கைக்கடிகார நிறுவனமான Werthanor நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது.
கடந்த 13ம் திகதி அதாவது, வியாழக்கிழமையன்று காலை, சில திருடர்கள் அந்த தொழிற்சாலைக்குள் நுழைந்துள்ளார்கள். அங்கிருந்த பணியாளர்களை மிரட்டி, அரிய உலோகங்களை பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார்கள்.

கொள்ளையர்களை தடுக்க முயற்சித்த ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொள்ளையடித்த விலைமதிப்பில்லாத அரிய உலோகங்களுடன் அந்த கொள்ளையர்கள் பிரான்சுக்குள் தப்பியோடியுள்ளார்கள்.
அவர்களை சுவிஸ் பொலிசாரும், பிரான்ஸ் நாட்டு பொலிசாரும் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். கொள்ளையடிக்கப்பட்ட அரிய உலோகங்களின் மதிப்பு என்ன என்பது தற்போதைக்கு தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அந்த தொழிற்சாலையில், சுமார் 230 பணியாளர்கள் பணிபுரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளையர்களை தடுக்க முற்பட்டவர் தாக்குதலுக்கு உள்ளாகி சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.