சுவிஸில் கோர சம்பவம் : மாடல் அழகி துண்டுதுண்டாக வெட்டிக்கொலை சுவிஸ் அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தெரிவானவர், தமது கணவரால் கொல்லப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் கடந்த 2003ல் வடமேற்கு சுவிட்சர்லாந்து அழகியாக தெரிவானவர், 2008ல் சுவிஸ் அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தெரிவானவர் Kristina Joksimovic.
இவர் தனது கணவரால் கொடூரமாக கொல்லப்பட்டதுடன், உடலை அந்த நபர் துண்டு துண்டாக வெட்டவும் செய்துள்ளார். கொடூரத்தின் உச்சமாக உடல் பாகங்களை அடையாளம் காணாதபடி அந்த நபர் அரைத்துள்ளார்.
ஆனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால், தற்காப்புக்காக தமது மனைவியை கொல்லும் நிலை ஏற்பட்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். கத்தியால் தம்மை தாக்க முயன்றதாலையே, வேறு வழியின்றி தமது மனைவியை கொலை செய்ததாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.

அது உண்மைக்கு புறம்பானது என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டினாவின் எஞ்சிய உடல் பாகங்கள் பாசல் மாகாணத்தின் பின்ங்கன் பகுதியில் இருந்து பிப்ரவரி மாதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரது கணவர் 41 வயதான தாமஸ், அடுத்த நாள் கைதாகியுள்ளார். முதற்கட்ட விசாரணையில், கிறிஸ்டினா கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனிடையே, காவலில் இருந்து தம்மை விடுக்க வேண்டும் என முறையிட்ட மனுவை பெடரல் நீதிமன்றம் செப்டம்பர் 11ம் திகதி நிராகரித்துள்ளது.

உள்ளூர் பத்திரிகைகளில் வெளியான தகவலின் அடிப்படையில், தனது மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டியதாக அவர் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.
மேலும் எஞ்சிய உடல் பாகங்கள் அரைக்கப்பட்டு, அமிலத்தில் கலந்ததாகவும் அந்த நபர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதுவரை நடந்த விசாரணையில் அந்த நபர் கொடூர குணத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இரக்கம் என்பது அவரிடம் துளியும் காணப்படவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.