சுவிஸில் இடம்பெற்ற ஐ.ரி.ஆர் ஊடக விருதுகள் 2024 நிகழ்வு சுவிட்சர்லாந்தில் கடந்த 9 வருடங்களாக இயங்கிவரும் ஐ.ரி.ஆர் ஊடக வலையமைப்பின் விருதுவழங்கும் நிகழ்வொன்று தேசக்காற்று இசைகுழுவின் போராதரவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்காவ் கன்டோனில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது.
2024 ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் தத்தம் துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்கள் இந்நிகழ்வில் ஐ.ரி.ஆர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் இளம் கலைஞர்களின் பரதநாட்டியம் உட்பட பல பாடல்கள், கவிதைகள் என மேடையில் அரங்ககேறியிருந்தது.
விழாவின் முதல் நிகழ்வாக மங்களவிளக்கேற்றல் இடம்பெற்றது. மங்கள விளக்கினை சிவகுரு யசோதன், வே.நகுலேந்திரன், கலாநிதி கல்லாறு சதீஸ், தொழிலதிபர் கந்தசாமி விநாயகமூர்த்தி, ஆயர்வேத வைத்தியர் சசி மீரா, தமிழ்பாடசாலை ஆசிரியை திருமதி.பத்மா ராஜா, மற்றும் நடன ஆசிரியை வாணி சர்மா ஆகியோர்களால் ஏற்றிவைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஈழப்போரில் உயிர்நீத்த மாவீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கான மௌனஅஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மேடைநிகழ்வுகளாக கவிதை, பாடல்கள், பரதநாட்டியம் என வெகு சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

சுவிட்சர்லாந்தின் இளம் பாடகர்கள் மிகச்சிறப்பாக தமது திறமையினை வெளிக்காட்டியிருந்தனர். ஐ.ரி.ஆர் ஊடக வலையமைப்பின் நிறுவுனரான ஜெனோ ஜனார்தனின் நேர்த்தியான கம்பீரக்குரலுடன் தமக்கான பாணியில் மேடை நிகழ்வை தொகுத்து வழங்கியிருந்தார். நிகழ்வுக்கான இசையினை தேசக்காற்று இசைக்குழு திறம்பட ஆற்றியிருந்தது.
மங்கள விளக்கேற்றிய சிறப்பு விருந்தினர்களோடு, குறித்த நிகழ்வில் அகில உலக சிலம்பம் சம்மேளத்தின் தலைவர் கௌரிதாசன், முத்தமிழ்சங்க மூத்த உறுப்பினர்கள் ,மூத்த ஊடகவியளாளர் கனகரவி மற்றும் இளம் ஊடகவியளாளர்களான தேவா மதன், குமணன் முருகேசன் மற்றும் சுவிட்சர்லாந்தின் இளம் விளையாட்டு வீரர் வைகுந்தன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் சுவிட்சர்லாந்தின் இளம் பாடகர்கள், பாடகிகள் உட்பட ஈழத்து பாடகர் வசீகரன், மூத்த கலைஞர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். முக்கிய நிகழ்வாக, “ஐ ரிஆர் விருதுகள் 2024” சுவிட்சர்லாந்தின் பல்வேறு ஆளுமைகளுக்காக வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.
Swiss தமிழ் டிவி ஆரம்பிக்கப்பட்டு மிகக்குறிகிய காலத்துக்குள் சுவிட்சர்லாந்து வாழ் தமிழர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தமைக்காக அதன் நிறுவுனர் தேவா மதன் அவர்களுக்காகவும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்துக்கது.