இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக ஜனாதிபதி, சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
எதிர்வரும் 15ம் திகதி உலகப் பொருளாதாரப் பேரவை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
இந்த ஆண்டுக்கான அரசியல், சமூக, பொருளாதார மற்றும் காலநிலை விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட உள்ளது.

இந்த விஜயத்தின் போது காலநிலை மற்றும் பொருளாதாரம் தொடர்பிலான பல்வேறு நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து மற்றும் ஏனைய நாடுகளின் முக்கிய பிரமுகர்களுடனும் ஜனாதிபதி சந்திப்புக்களை நடத்த உள்ளார்.
சுவிட்சர்லாந்து விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி ரணில், எதிர்வரும் 18ம் திகதி உகண்டாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
உகண்டாவில் நடைபெறவுள்ள அணிசேரா மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.
இந்த விஜயத்தை முடித்துக்கொண்டு எதிர்வரும் 24ம் திகதி ஜனாதிபதி நாடு திரும்ப உள்ளார்.