சுவிட்சர்லாந்தில் இடைநிறுத்தப்பட்ட 3 ஏதிலி மையங்கள் மீண்டும் திறப்பு
சுவிட்சர்லலாந்தில் ஏதிலிகளின் மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அரசாங்கம் மூன்று ஏதிலி மையங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது. கடந்த குளிர்காலத்தில், விண்ணப்பங்கள் குறைந்த நிலையில் 9 மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகல்வு செயலகம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. மௌடொன் (Moudon), டூபென்டார்ஃப் (Dübendorf), ஐகென்தால் (Eigenthal) ஆகிய முகாம்கள் மீளத் திறக்கப்பட உள்ளன.

இவை ஒவ்வொன்றும் 200 பேரை தங்கவைக்கும் திறனுடையவை. இவற்றை மீண்டும் இயக்குவதன் மூலம் ஏதிலிகளுக்கு அடைக்கலம் வழங்கக்கூடிய மொத்த வசதிகள் 7,500 இடங்களுக்கு மேல் அதிகரிக்கவுள்ளது.
சுவிட்சர்லாந்தில் தற்போது இயங்கும் 30 அகதிகள் மையங்களில் உள்ள மொத்த இடங்கள் 73% வீதமானவை பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், பிரஞ்சுமொழி பேசும் பகுதி, சூரிச், டிசினோ மற்றும் மத்திய சுவிட்சர்லாந்து போன்ற பகுதிகளில் இந்த விகிதம் ஏற்கனவே 80% வரை உயர்ந்துள்ளது.
இந்த மையங்கள் திறக்கப்படுவதன் மூலம், உக்ரைனிய பாதுகாப்பு தேவைப்படுபவர்களையும் தொடர்ந்தும் சுவிட்சர்லாந்து கவனித்துக் கொள்ள முடியும், என அறிவிக்கப்பட்டுள்ளது.