சுவிட்சர்லாந்தில் 2024 இல் கடும் வானிலை பாதிப்பு: பில்லியன் மதிப்பிலான சேதம்
காடு, பனி மற்றும் இயற்கை நிலப்பரப்பியல் ஆய்வு நிறுவனம் (WSL) வெளியிட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கடும் வானிலை அறிக்கை சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட அழிவின் தீவிரத்தைக் காட்டுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் மூவர் காணாமல் போயுள்ளனர். பொருளாதார சேதம் சுமார் ஒரு பில்லியன் சுவிஸ் ஃபிராங்குகளுக்கு அருகில் உள்ளது.
இந்த எண்ணிக்கை 2005க்குப் பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய சேதமாகவும், 1972 முதல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து ஐந்தாவது அதிக செலவான ஆண்டாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் மிக மோசமாக இருந்தது. கிழக்கு மற்றும் மத்திய சுவிட்சர்லாந்தை கடும் மழையும் பெருவெள்ளமும் தாக்கியது. வலாய் (Valais) கன்டோனில் பேரழிவு தரும் மண்சரிவுகள்- வீடுகள், சாலைகள் மற்றும் வாழ்வாதாரங்களை அழித்தன.
டிசினோ (Ticino) பிராந்தியத்தில் உள்ள மக்ஜியா பள்ளத்தாக்கு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. நதிகள் பாலங்கள், வீடுகள், அடிப்படை வசதிகள் அனைத்தையும் வெள்ளத்தில் அடித்துச்சென்றது.. சில சிறிய கிராமங்கள் முற்றிலும் புதைந்தன. ஒரே இரவில் அங்கு ஏழு பேர் உயிரிழந்தனர்.
சுவிட்சர்லாந்து இயற்கை பேரழிவுகளுக்கு எதிராக பல பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தாலும், காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட இழப்புகள், எதிர்காலத்தில் கடும் வானிலை சம்பவங்களை சமாளிக்க புதிய திட்டங்கள் மற்றும் முதலீடுகள் அவசியம் என்பதை நினைவூட்டுகின்றன.
© WRS