வில்டர்ஸ்வில் (Wilderswil) அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 9 பேர் காயம், இருவர் தீவிரமாக
பேர்ன் மாநிலம் வில்டர்ஸ்விலில் (Wilderswil BE) ஞாயிறு அதிகாலை நிகழ்ந்த கடும் வாகன விபத்தில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பேர்ன் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்து வில்டர்ஸ்விலின் டாங்கல்ஸ்டுட்ச் (Dangelstutz) பகுதியில் அதிகாலை 2.15 மணியளவில் நடைபெற்றது. ஆரம்பகட்ட தகவலின்படி, சுவைல்யுட்சினன் (Zweilütschinen) பகுதியிலிருந்து வில்டர்ஸ்வில் நோக்கி சென்ற ஒரு காரின் சாரதி, எதிர்வந்த பாதையில் காரை செலுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் எதிரே வந்த மற்றொரு காருடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் காயமடைந்த ஒன்பது பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலை மோசமாக உள்ளது.
விபத்து நடைபெற்ற இடமான டாங்கல்ஸ்டுட்ச் சாலையை, ட்சிங்கெல்மாத்தே(Tschingelmatte) சுற்றுச்சாலை மற்றும் மார்டமாட்(Martamatt) சந்திப்புக்கிடையே, போலீசார் சிறிது நேரம் மூடியிருந்தனர். இது மூலம் மீட்பு பணிகள் தடைபடாமல் நடைபெற முடிந்தது.
இந்த மீட்பு பணிகளில் இரண்டு ரேகா (Rega) ஹெலிகாப்டர்கள், ஒரு எயார்-கிளேசியர் (Air-Glaciers) ஹெலிகாப்டர், ஐந்து ஆம்புலன்ஸ்கள், பேர்ன் மாநில போலீசாரின் பல்துறை பிரிவுகள் மற்றும் வில்டர்ஸ்வில், பேடெலி (Bödeli) தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.
தற்போது, இந்த விபத்துக்கான காரணங்களை தெளிவுபடுத்தும் வகையில் பேர்ன் மாநில காவல்துறை மற்றும் ஓபர்லாந்த் (Oberland) பிராந்திய அரசு வழக்கறிஞர் அலுவலகம் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.
@Kapo BE