லேசான கார் விபத்து : வாய் தகராறாக மாறியதில் ஒருவர் பலி.!! சுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில், தன் கார் மீது லேசாக இடித்த காரின் சாரதியுடன் சண்டையிடுவதற்காக காரிலிருந்து இறங்கினார் ஒருவர். அடுத்த கணம், அவர் எதிர்பாராத ஒரு பயங்கரம் நிகழ்ந்தது.
குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில், சூரிச் A1 நெடுஞ்சாலை ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு கார் மீது, பின்னால் வந்த கார் ஒன்று லேசாக இடித்துள்ளது.
உடனே காரிலிருந்து இறங்கிய முதல் காரின் உரிமையாளர், தன் கார் மீது மோதிய காரின் சாரதியிடம் சண்டையிட்டுள்ளார். அவர் மோசமாக சண்டையிட்டுக்கொண்டிருக்க, வேகமாக வந்துகொண்டிருந்த மற்றொரு கார் அவர் மீது மோதியுள்ளது.

மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட அவர், உயிரிழந்துவிட்டார். அவரது மரணத்துக்குக் காரணமான சாரதியை பொலிசார் கைது செய்த நிலையில், அவர் அளவுக்கு மீறி மது அருந்தியிருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், ஒருவரது உயிரிழப்புக்குக் காரணமாக இருந்ததாக அந்த காரின் சாரதிக்கு 1,500 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு 16 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
என்றாலும், அவர் உடனடியாக சிறை செல்லத்தேவையில்லை என முடிவு செய்துள்ள நீதிமன்றம், அவரால் கொல்லப்பட்ட நபரின் குடும்பத்துக்கு இழப்பீடும் வழங்க உத்தரவிட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், தன் கார் மீது லேசாக இடித்த காரின் சாரதியுடன், சாலையில் வைத்து மோசமாக நடந்துகொண்டுள்ளார் உயிரிழந்த அந்த நபர்.
ஆக, ஒரு சிறிய பிரச்சினை, உயிரிழப்பு, சிறை, நீதிமன்றம், அபராதம் என பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிட்டது.