பெர்ன் நகரில் காசா மக்களுக்கு ஆதராவாக மாபெரும் போராட்டம்
சுவிட்சர்லாந்தின் Bern நகரின் வீதிகள், கடந்த சனிக்கிழமை பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாகின. காசா பகுதிக்குள் நடைபெறும் போருக்கு எதிராகவும், உடனடி மற்றும் நிலையான போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் சுமார் 20,000 பேர் வரை பொது மக்கள் பங்கேற்ற பரபரப்பான பேரணி நடைபெற்றது.
மாலை நேரத்தில் தொடங்கிய இந்த அமைதிப் பேரணி, பெர்னின் மைய வீதிகளூடாக நகர்ந்தது. நாடு முழுவதிலும் இருந்து மக்கள் குடும்பங்களோடு, கூடித்திரண்டு காசா மக்களுக்கு ஆதரவாக ஒருமித்த குரல் எழுப்பினர்.
போராட்டம் முழுக்க பெரும்பாலும் அமைதியாகவே இடம்பெற்றிருந்த போதிலும், ஒரு சில இடங்களில் சிறிய குழுவினர் கைகலப்புகளைத் தூண்ட முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசாரின் தலையீட்டால் எந்தவொரு பெரிய அமைதி இழப்பும் இல்லாமல், பேரணி வெற்றிகரமாக முடிந்தது.

இந்த பேரணிக்கு சுவிசின் பல முக்கிய அமைப்புகளும் தங்களது ஆதரவை தெரிவித்திருந்தன. சுவிஸ் தொழிற்சங்க கூட்டமைப்பு (USS), சர்வதேச மன்னிப்பு அமைப்பு (Amnesty International), சமூக ஜனநாயகக் கட்சி (SP) மற்றும் பசுமைக் கட்சி (Grüne Partei) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக களம் இறங்கியிருந்தன.
பேரணி முடிவில் பேசிய பேச்சாளர்கள், சுவிட்சர்லாந்தின் நிர்வாக மையமான பெடரல் கவுன்சில், காசா பகுதியில் உடனடி, நிலையான, மற்றும் சுயாதீனமாக கண்காணிக்கப்படும் ஒரு போர் நிறுத்தத்தை தெளிவாக ஆதரிக்க வேண்டும் எனக் கடுமையாக வலியுறுத்தினர்.
இத்தகைய ஆர்ப்பாட்டங்கள், உலக நாடுகள் மற்றும் அமைப்புகள், மத்திய கிழக்கில் தொடரும் வன்முறைகளை சரியாக அணுக வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன.
@swissinfo