துர்காவ் மாகாணத்தில் போலிதொலைபேசி அழைப்பு மோசடி தொடர்பில் எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தின் பல்வேறு மாகாணங்களில் இடம்பெறும் போலீதொலைபேசி அழைப்பு மோசடிகள் போன்று, துர்காவ் மாகாண காவல்துறைக்கு சமீப காலமாகப் பல்வேறு புகார்கள் கிடைத்துள்ளன. இதில், சிலர் காவல்துறையினராக நடித்து, பொதுமக்களுக்கு தொலைபேசியில் அழைத்து மோசடியைச் செய்துள்ளனர்.
போலி காவலர்கள் எப்படி செயல்படுகிறார்கள்?
இந்த மோசடிக்காரர்கள், “உங்கள் பகுதியில் திருட்டு நடந்துள்ளது, அந்த சம்பவத்தில் உங்களுடைய பெயரும் தொடர்புகளும் கிடைத்துள்ளன” என்று கூறி, பயத்தை ஏற்படுத்துகிறார்கள்.
அதன்பின், “உங்கள் வங்கிக் கணக்குகள் மற்றும் விலைமதிக்கிடைக்கும் பொருட்கள் அபாயத்தில் இருக்கலாம், அவற்றை பாதுகாப்பாக காவல்துறைக்கு ஒப்படையுங்கள்” எனக் கூறுகிறார்கள்.
இந்த நிலையில், ஒருவர் உங்கள் வீட்டுக்கு வந்து பணம் மற்றும் நகைகளை பெற்றுச் செல்வார் அல்லது குறிப்பிட்ட இடத்தில் அதை வைத்துச் செல்லுமாறு கூறுவார்கள்.

யார் குறிவைக்கப்படுகிறார்கள்?
இவர்கள் பெரும்பாலும் நிலையான தொலைபேசி இணைப்புகளை (landline) வைத்துள்ள மூத்த குடிமக்களை குறிவைத்து செயல்படுகிறார்கள். குறிப்பாக, தொலைபேசி புத்தகங்களில் முழுப்பெயர் உள்ளவர்கள் இவர்கள் கண்களில் விழுகிறார்கள்.
இவ்வாறான திருட்டு சம்பவங்கள் தொடர்பில் துர்காவ் காவல்துறையின் பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அதில் குறிப்பிடுகையில்,
உண்மையான காவல்துறையினர் ஒருபோதும் உங்கள் பணம் அல்லது நகைகளை கேட்டுக்கொள்ள மாட்டார்கள். அழைப்பை எடுத்தவர் காவல்துறையினராக இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த, உடனே அழைப்பை முடித்து, அவசர சேவை எண் 117-க்கு அழைக்கவும்.
உங்கள் தொலைபேசி திரையில் காட்டப்படும் எண் போலியானதாக இருக்கலாம். இது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானது. எனவே போலீசாரின் அவசர எண் போன்று இருந்தாலும் நம்பவேண்டாம் எனவும் போலீசார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.