சுவிஸ் தூதுவர்கள், பிரஜைகள் ஈரானில் படுகொலை செய்யப்பட்டார்களா!
தெஹ்ரானுக்கான சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரிகள் மற்றும் சுவிஸ் பிரஜைகள் ஈரானில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் சுவிட்சர்லாந்தின் புலனாய்வு சேவை, Federal Intelligence Service (FIS) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தெஹ்ரானில் கடமையாற்றிய சுவிஸ் தூதரக அதிகாரிகள் மீது ஈரானிய உளவுத்துறை செயல்பாடுகள் பெரும் அபாயமாக உருவெடுத்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை, ஈரானில் நடந்த நான்கு மரணங்கள் தொடர்பான சுவிட்சர்லாந்தின் முன்னணி ஊடக நிறுவனங்களின் விசாரணைக்கு பின்னர் வெளியிடப்பட்டது.
- தெஹ்ரானுக்கான சுவிஸ் துணைத் தூதுவர் ஸ்வில்வி ப்ருன்னர், 2021 மே மாதத்தில் தெஹ்ரானில் உள்ள தனது 17வது மாடி வீட்டிலிருந்து விழுந்து உயிரிழந்தார். ஈரான் அரசு இந்த சம்பவத்தை தற்கொலை என அறிவித்திருந்தது. ஆனால் முன்னாள் ஈரானிய உளவுத்துறை அதிகாரி ஒருவர், அவர் துரதிஷ்டவசமாக நடந்த உளவு நடவடிக்கையின் போது தள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
- மரணம் நிகழ்வதற்கு முன் அவரது வீட்டில் பாததடங்கள் இருந்ததாகவும்,
- தற்கொலை கடிதம் இருந்தாலும் அது கையொப்பமில்லாதது என்றும்,
- அவரது உடல் பெரும்பாலான உள்ளுறுப்புகள் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டது என்றும் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

- 2023-ல், தேஹ்ரானில் ஸ்விஸ் இராணுவ ஒப்பந்ததாரர் ஒருவர் திடீரென மயங்கி, பின்னர் சுவிட்சர்லாந்தில் இறந்தார். இவர் உண்மையில் இரகசிய உளவுத்துறை அதிகாரி என விசாரணையில் தெரியவந்தது. விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
- தூதரகத்துக்குச் செல்லும் வழியில், ஒரு உள்நாட்டு ஊழியர் கத்தியால் காயப்படுத்தப்பட்டு கையில் துப்பாக்கியால் தாக்கப்பட்டார். இதனை ஈரான் பொலிஸ் கொள்ளை முயற்சி என விளக்கியது. ஆனால் பாதுகாப்பு பலமான தெஹ்ரானில் இது மிகச் சாத்தியமற்றதாக சுவிஸ் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
- 60 வயதுடைய சுவிஸ் சுற்றுலாப் பயணி ஒருவர், இராணுவ தளங்களை படம் எடுத்ததாகவும் மண் மாதிரிகளை சேகரித்ததாகவும் கூறி கைது செய்யப்பட்டு, செம்னான் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக ஈரான் அறிவித்தது. ஆனால் சுவிஸ் அதிகாரிகளினால் அவரை சந்திக்க முடியவில்லை, உடல்தொடர்பான அறிக்கைகள் வெளியிடப்படவில்லை.
ஏன் ஸ்விஸ் தூதரகம் குறிவைக்கப்படுகிறது?
1980-ம் ஆண்டு முதல், ஈரானில் அமெரிக்க நலன்களை சுவிட்சர்லாந்து பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறது. இது சுவிஸ் தூதரக ஊழியர்களை சிஐஏ உளவுத்துறை முகவர்களாக ஈரான் சந்தேகிக்க வைக்கிறது. ஈரான் உளவுத்துறைக்குள் இது தொடர்பான பகைமையான சந்தேக உணர்வு நிலவுகிறது என சுவிஸ் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
சுவிஸ் அரசின் பதில்கள் மற்றும் எதிர்க்கட்சியின் நடவடிக்கைகள்
- சுவிஸ் வெளியுறவு அமைச்சகம், முழு உண்மையை கண்டறிய விரும்புவதாக கூறியுள்ளது. ஆனால் ஈரானில் தன்னிச்சையான விசாரணை நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. துணைத்தூதுவர் ஸ்வில்வி ப்ருன்னர் மரணம் தொடர்பான குற்றவியல் விசாரணையை, பதிவுகள் பற்றாக்குறை காரணமாக 2023 நவம்பரில் அரச தரப்பு வழக்குரைஞரினால் முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சித் தலைவர்கள், இதை அடுத்த வெளியுறவு செயலாளர் குழு கூட்டத்தில் எடுத்துச்செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த மரணங்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக சுவிட்சர்லாந்து புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும், ஈரான் – மேற்கத்திய நாடுகள் இடையிலான உளவு பனிப்போர், மற்றும் அதில் சுவிட்சர்லாந்தின் ‘நடுநிலை’ பங்கு எவ்வாறான அதிக அபாயத்தில் உள்ளதென்பதை வெளிக்காட்டுகின்றது.
@tamilnews