சுவிஸ் அரசின் நிதி உதவியைப் பெற்றுவந்த பெண்ணுக்கு அரசு அளித்துள்ள அதிர்ச்சி
சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவரும் பெண்ணொருவருக்கு அரசு அனுப்பிய நோட்டீஸ் ஒன்றால் அதிர்ச்சியில் ஆழந்துள்ளார். அதில், அவர் அரசுக்கு 70,000 சுவிஸ் ஃப்ராங்குகள் செலுத்தவேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கவே, அதிர்ச்சி அடைந்தார்.
எதற்காக 70,000 சுவிஸ் ஃப்ராங்குகள் செலுத்தவேண்டும்?
ஜெனீவாவில் வாழ்ந்துவரும் அந்தப் பெண் அரசு வழங்கும் நிதி உதவியைப் பெற்றுவந்துள்ளார். ஆனால், அவர் சுவிட்சர்லாந்திலேயே வாழவில்லை, ஆகவே அவர் தான் பெற்ற அரசின் நிதி உதவியில் 70,000 சுவிஸ் ஃப்ராங்குகள் செலுத்தவேண்டும் என அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தெரியவந்தது.
விடயம் என்னவென்றால், அந்தப் பெண் ஆண்டுக்கு ஒரு முறை பிரித்தானியாவுக்குச் சென்று அங்கு வாழும் தனது தோழியைச் சந்தித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரித்தானியாவுக்குச் சென்ற அந்தப் பெண் ஜனவரி மாதத்தின் துவக்கம் வரை பிரித்தானியாவிலேயே தங்கிவிடவே, அவர் சுவிட்சர்லாந்திலேயே வாழவில்லை என அதிகாரிகள் முடிவுசெய்துவிட்டார்கள்.
பின்னர் அவர் supermarket loyalty card பயன்படுத்தியதற்கான ஆதாரங்களைக் கொடுத்து, அவர் ஜெனீவாவில்தான் வாழ்ந்துவருகிறார் என்பதை நிரூபிக்கவேண்டியதாகியுள்ளது. இதற்கிடையில், அலட்சியம் காரணமாக அந்தப் பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பியதற்காக, அவரது சட்டத்தரணி அதிகாரிகளுக்கு எதிராக புகாரளிக்க முடிவு செய்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் அரசின் உதவி பெற்று வாழ்ந்துவருபவர்களும், இன்னொரு நாட்டுக்கு ஒரு சிறிய சுற்றுலா செல்லலாம் என்பது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.