சுவிட்சர்லாந்தில் பார்சல் வெடிகுண்டுகள் அனுப்பப்பட்ட விவகாரத்தில் முக்கிய திருப்பம்.!!
சுவிட்சர்லாந்தில் சில வீடுகளுக்கு பார்சல் வெடிகுண்டுகள் அனுப்பப்பட்ட விவகாரத்தில் முக்கிய திருப்பம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
கடந்த கோடையில், சுவிட்சர்லாந்தின் Saint-Jean என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பார்சலில் வந்த குண்டு ஒன்று வெடித்தது. பின்னர், Grange-Canal என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்த தபால் பெட்டி ஒன்றிலிருந்த பார்சல் வெடிகுண்டு ஒன்று வெடித்ததில், 12 வயது சிறுமி ஒருத்தி படுகாயமடைந்தாள்.
அதைத் தொடர்ந்து, கடந்த மாத இறுதியில், Rue de la Corraterie என்னுமிடத்தில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றிற்கு மர்ம பார்சல் ஒன்று வர, நேரடியாக ஃபெடரல் பொலிசாரே விசாரணையில் இறங்கினார்கள்.

சமீபத்தில், ஜெனீவாவிலுள்ள கைக்கடிகார நிறுவன பணியாளர்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அந்நிறுவனம் மீது கடந்த சில ஆண்டுகளாக துன்புறுத்தல் மற்றும் தொல்லை கொடுத்தல் புகார்கள் அளிக்கப்பட்டுவருவதாக ஊடகங்கள் தெரிவித்திருந்ததால், அந்த நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் ஒருவர் இந்த சம்பவங்களின் பின்னால் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
முக்கிய திருப்பம்
ஆனால், வீடுகளுக்கு பார்சல் வெடிகுண்டுகள் அனுப்பப்பட்ட விவகாரத்தில் தற்போது முக்கிய திருப்பம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
வெடிகுண்டுகளை பார்சல்களில் அனுப்பியவர்கள், தங்கள் நோக்கம் குறிப்பிட்ட கைக்கடிகார நிறுவனத்தை மிரட்டி பணம் பறிப்பது மட்டுமே என தெரிவித்துள்ளார்கள்.
தங்களுக்கு பணத்தைத் தவிர வேறு நோக்கம் இல்லை என்று கூறியுள்ள அவர்கள், தங்களுக்கு 24 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் கிரிப்டோ கரன்சியாக கொடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்கள்.