இளம்பெண்ணை சீரழித்துக் கொன்றுவிட்டு சுவிட்சர்லாந்துக்கு தப்பிய நபர் பிரான்சில் கடந்த மாதம் இளம்பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரைக் கொலை செய்ததாக புலம்பெயர்ந்தோர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டார்.
செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி, பிரான்ஸ் தலைநகரான பாரீஸில், Paris-Dauphine பல்கலைக்கழக மாணவியான Philippine (19) என்னும் இளம்பெண், வனப்பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அவரைக் கொலை செய்ததாக மொராக்கோ நாட்டவரான 22 வயது நபர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபர் ஏற்கனவே பெண்களுக்கெதிரான மோசமான குற்றம் ஒன்றில் ஈடுபட்டு சிறை சென்றவர். நாட்டை விட்டு வெளியேற்றப்பட இருந்த அவர் சட்டவிரோதமாக பிரான்சில் வாழ்ந்துவந்துள்ளார்.

அந்த இளம்பெண்ணை சீரழித்துக் கொன்றுவிட்டு அவர் சுவிட்சர்லாந்துக்கு தப்பிய நிலையில், ஜெனீவா மாகாணத்தில் சுவிஸ் பொலிசார் அவரை செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி கைது செய்தார்கள்.
இந்நிலையில், அந்த நபரை பிரான்சுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை பிரான்ஸ் அதிகாரிகள் துவக்கியுள்ளார்கள்.
பிரான்ஸ் நீதித்துறை அமைச்சரான Didier Migaud, குற்றம் செய்த அந்த நபர் பிரான்சில் விசாரணைக்குட்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதுடன், சுவிஸ் அதிகாரிகளிடம் அதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.