ஜெனீவாவில் அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம்: ஆறு மாதத்தில் நான்காவது வேலைநிறுத்தம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் கடந்த வியாழக்கிழமை (23 ஏப்ரல்) பிற்பகல் சுமார் 2,000 அரசு துறை ஊழியர்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆறு மாதங்களில் இது நான்காவது வேலைநிறுத்தமாகும்.
Inter-Union Cartel முன்னெடுத்த இந்த போராட்டம், Plainpalais பகுதியில் இருந்து நகரின் பழைய பகுதி நோக்கி பேரணியாக நடைபெற்றது. சம்பள உயர்வு நிறுத்தப்பட்டிருப்பதும், எதிர்பார்க்கப்படும் பட்ஜெட் குறைப்புகளும் எதிர்த்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.

தொழிற்சங்க தலைவர்கள், இந்த நிலைமையால் அரசு ஊழியர்கள் உண்மையான வருமான இழப்பை சந்தித்து வருகிறார்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும், அரசு நிதிநிலை சீராக இருந்தபோதும் அதை குறைத்து காட்டி, ஊழியர்களின் கோரிக்கைகளை புறக்கணிக்கிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தப் போராட்டத்தை தொடர்ந்து, மே 7 ஆம் தேதி மீண்டும் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றே 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளதால், மேலும் போராட்டங்கள் மற்றும் சேவை பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.