சூரிச் சைவ ஆலயத்தில் திருட்டு முயற்சி : திருடும் போது மயங்கி விழுந்த திருடன்.!! சூரிச் மாகாணத்தின் தூர்த்தன் பகுதியில் அமைந்துள்ள சைவ ஆலயம் ஒன்றில் கொள்ளை முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை 26ம் திகதி அன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் :-
சூரிச் – தூர்த்தன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் வெளிப்பகுதியில் அமைந்துள்ள சாளரத்தை நூதனமாக திறந்து அதன் வழியாக உள்ளே நுழைந்த கொள்ளையன் பிள்ளையார் சன்னிதானத்தின் முன்பு அமைந்திருந்த சிறிய உண்டியலையும் உடைத்துள்ளார்.
ஆனால் அங்கு எதிர்பாராத விதமாக கொள்ளையனால் அங்கிருந்து தப்பிக்க முடியாமல் அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். இச்சம்பவம் அங்குள்ளவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதன் பின்னர் ஆலயத்தின் குருக்கள் முரளி ஐயாவுடைய துணைவியார் ஏதோ சத்தம் கேட்டு வெளியில் வந்தபோது ஒருவர் கீழே கிடப்பதை அவதானித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குறித்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதோடு அவ்விடத்திலையே கைது செய்யப்படடார். கைது செய்யப்பட்டவர் ருமேனிய நாட்டைச்சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இது மாத்திரம் இன்றி குறித்த நபர் ஆலயத்திற்குள் நுழையும் போது ஆலய சமையலறையின் வெளிப்புறத்தில் இருந்த காய்கறிகள் எல்லாவற்றையும் தூக்கி வீசி நாசம் செய்துள்ளதாகவும் ஆலயபிரதம குருக்கள் முரளி ஐயா அவர்கள் தெரிவித்தார்.
குறித்த இளைஞன் உண்டியலை திருடும் போது ஏன் கீழே மயங்கி விழுந்தார் என்பதற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இச்சம்பவம் ஆலயத்தில் இடம்பெற்ற ஒரு அமானுசிய நிகழ்வாகவே பக்தர்கள் உற்றுநோக்குகின்றனர்.
சூரிச் கன்டோனல் போலீசார் கைது செய்யப்பட்ட இளைஞன் மீது வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.