சுவிற்சர்லாந்து நாட்டில் பேரெழிச்சியுடன் நடந்த சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத்தமிழ்ச்சங்கம் அன்பே சிவம் நடாத்திய “அற்றார் அழிபசி தீர்த்தல் 2025” நிகழ்வும் தாயக உணவுக் கண்காட்சியும் சூரிச் சிவன் ஆலய 31ஆவது ஆண்டு நிறைவும், அற்றார் அழபசி தீர்த்தல் 15ஆவது ஆண்டு நிறைவும் கடந்த 27.04.2025 அன்று Sporthalle Unterrohr, Unterrohrstrasse 2 , 8952 Schlieren எனும் இடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சூரிச் சிவன் ஆலய சைவத்தமிழ்ச் சங்கமானது சைவமும் தமிழும் வளர்க்கும் பெருநோக்கோடு ஆரம்பிக்கப்பட்டு கடந்த 15 வருடங்களாக “அன்பே சிவம்” அறக்கட்டளையை நிறுவி தாயகத்தின் மாவட்டங்கள் தோறும் மனிதநேய செயற்பாட்டாளர்கள் ஊடாக போர், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருவாரியான உதவிகளை வழங்கி வருகிறார்கள். அதுமட்டுமன்றி யாழ் முகமாலைப் பகுதியில் “மூதாளர் பேணலகம்” அமைத்து ஆதரவற்ற முதியவர்களைப் பராமரிக்கின்ற மிகப் பெரிய பணியையும் ஆற்றி வருகிறார்கள். “அற்றார் அழிபசி தீர்த்தல்” பெருநிகழ்வின் ஊடாக சேகரிக்கப்படும் நிதியும் மூதாளர் பேணலகப் பராமரிப்பு பணிகளுக்கே வழங்கப்படுகின்ற மனிதநேயக் கைங்கரியமும் நடைபெறுகின்றது.
இந்நிகழ்வின் நுழைவாயில் தாயக உணர்வுகளைத் தாங்கிய அலங்கரிப்போடு காட்சி தர தொடர்ந்து தாயக உணவுக் கண்காட்சி 150 இற்கும் மேற்பட்ட தாயக உணவுகளோடு ஒரே சீருடை அணிந்த அன்பே சிவம் தொண்டர் சபையினரால் உடனுக்குடன் சமைத்து வழங்கப்பட்ட காட்சியும், தாயகத்து பழவகைகள், மரக்கறி வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன இந்த நிகழ்வு தாயகத்தில் நிற்கின்ற உணர்வினை மேலெழச் செய்கின்றன.
இந் நிகழ்வின் ஆரம்பநிகழ்வாக விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கினை திரு.திருமதி. தங்கராசா தங்கரத்தினம் ஆகியோர் ஏற்றி வைத்தனர். உணவுக் கண்காட்சிக் கூடத்தினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சுவிஸ் பொறுப்பாளர் திரு. ரகுராம் அவர்களும் சூரிச் சிவன் ஆலய தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. இராதாகிருஸ்ணன் அவர்களும் திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
விழாச் சுடரினை திரு.திருமதி. தவபாலன் சாந்தினிதேவி அவர்களும் பொதுச்சுடரினை திரு.சிவபாதம் பாலன் அவர்களும் ஏற்ற இறைவணக்கத்தினை ஓதுவார் சாம்பசிவம் செல்லர் அவர்கள் பாடினார். தொடர்ந்து அகவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்றது.

ஆசியுரையினை சிவகாமநிதி சிவஶ்ரீ வாமதேவகைலாசநாத குருக்கள் அவர்களும் வரவேற்புரையினை திரு. குமரவேல் முருகையா அவர்களும் நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து இளம் தொண்டர் சபையின் ஒழுங்குபடுத்தலில் செந்தமிழ் கலைக்கூட, திருக்கோணேஸ்வரர் நடனாலய மாணவிகளின் நடன நிகழ்ச்சிகளும் சங்கீதாலய மாணவர்களின் வீணை இசையும் சிவன்கோவில் இளம்தொண்டர் சபையினரின் இசை நிகழ்வும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சூரிச் சிவன் ஆலய கடந்த ஆண்டு நிகழ்வுகளின் தொகுப்பு “பூத்த கொடிகள்” எனும் தலைப்பில் நூல் வடிவாக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இளம் பாடகர்களின் கணீர் குரலில் தாயக இசைச் சங்கமம் நிகழ்வும் நடைபெற்றது.
சிறப்பு நிகழ்வாக தமிழ்நாட்டில் இருந்து வருகைதந்த மனிதநேய செயற்பாடுகளில் ஈடுபடும் விஜய் தொலைக்காட்சியின்
“கலக்கப் போவது யாரு” புகழ் பாலா அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

தொடர்ந்து சூரிச் சிவன் கோவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. இராதாகிருஸ்ணன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் திரு.ரகுராம் ஆயோர் உரைகள் நிகழ்த்தினர். நிதி அனுசரணையாளர்கள் மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து நன்றியுரையினை திரு.திருமால் அம்பலவாணர் அவர்கள் நிகழ்த்தினார். இந்நிகழ்வுகளை திரு. திருநாவுக்கரசு திருநாமசிங்கம் அவர்களும் திரு.செல்வா கவிதரன் அவர்களும் தொகுத்து வழங்கினர்.
சுவிற்சர்லாந்து நாட்டின் பல மாநிலங்களில் இருந்து பெருந்திரளான ஈழத்தமிழ் உறவுகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
து.திலக்(கிரி),
யாழ்.உரும்பையூர்/சுவிற்சர்லாந்து.