சுவிட்சர்லாந்தில் நேற்றிரவு நிகழ்ந்த பாரிய வெடிவிபத்தொன்றில் சிக்கி இரண்டு பேர் பலியானார்கள்.
சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்திலுள்ள Nussbaumen நகரில், நேற்று மாலை 7.00 மணியளவில், கட்டிடமொன்றின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் வெடிவிபத்தொன்று ஏற்பட்டது.
அந்த விபத்தில் இரண்டு பேர் பலியானார்கள், 11 பேர் காயமடைந்துள்ளார்கள். வேறு யாரேனும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளார்களா என்பதை அறிய தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
(c) Keystone
வெடிவிபத்தைத் தொடர்ந்து, அந்தக் கட்டிடத்தின் பல குடியிருப்புகளுக்கும் தீ பரவத் துவங்க, அங்கு வசித்துவந்தவர்களை அவசரமாக வெளியேற்றவேண்டிய நிலை ஏற்பட்டது.
கட்டிடத்தின் மாடியில் தஞ்சம் அடைந்தவர்களை ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். அதில் வசித்தவர்கள் தற்போது தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
கட்டிடமொன்றின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த வானவேடிக்கைகளுக்கான பட்டாசுகளே இவ்வாறு வெடித்துள்ளாதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த வானவேடிக்கை பட்டாசுகள் மிகவும் சக்திவாய்ந்தவை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்கள் 43 வயதான இத்தாலியர் மற்றும் 24 வயதான சுவிஸ் நபர்கள் என தற்போது தெரியவந்துள்ளது.