UBSக்கு எதிர்ப்பு: வங்கி விதிகளை கடுமையாக்கும் திட்டம் சர்ச்சை
சுவிட்சர்லாந்து அரசின் புதிய வங்கி விதிமுறைகள் தொடர்பான முன்மொழிவுக்கு எதிராக UBS வங்கி கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து கூட்டாட்சி அரசு (Federal Council) முன்வைத்துள்ள இந்த திட்டத்தின் படி, நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பெரிய வங்கிகள் தங்களது வெளிநாட்டு கிளைகளுக்கான நிதி அபாயங்களை முழுமையாக மூடிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த முன்மொழிவை UBS “மிகவும் கடுமையானது” என்றும், உலகளாவிய வங்கி நடைமுறைகளுக்கு ஒத்துப்போகாதது என்றும் விமர்சித்துள்ளது.
இந்த விதிகள் அமலுக்கு வந்தால், வங்கிக்கு கூடுதலாக பத்து பில்லியன் கணக்கில் மூலதனம் தேவைப்படும் என UBS எச்சரித்துள்ளது. மேலும் இது வங்கி துறையை மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது.

இதற்கிடையில், Economiesuisse எனப்படும் சுவிட்சர்லாந்து தொழில்துறை அமைப்பும் இதேபோன்ற கவலைகளை வெளியிட்டுள்ளது. அதிகப்படியான மூலதனத் தேவைகள் கடன்களின் விலையை உயர்த்தி, தொழில்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிதி அணுகலை சிரமப்படுத்தும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாகவும், இவ்வாறு கடுமையான மூலதன விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டால், தங்களது தலைமையகத்தை அமெரிக்காவிற்கு மாற்றும் வாய்ப்பு இருப்பதாக UBS எச்சரித்திருந்தது.
இந்த விவகாரம் தொடர்பான முன்மொழிவு இந்த ஆண்டின் பின்னர் சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இது நாட்டின் வங்கி துறையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான விவாதமாக பார்க்கப்படுகிறது.