ஜூரா கன்டோனில் (Kanton Jura) தொடர் திருட்டு சம்பவங்கள்: காவல் துறை எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தின் ஜூரா கன்டோனில் (Kanton Jura) கடந்த சில நாட்களாக புதிய திருட்டு அலை ஒன்று பரவி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் கன்டோன் முழுவதும் மொத்தம் 16 உடைப்பு திருட்டு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களில் குடியிருப்பு வீடுகளே அதிகமாக குறிவைக்கப்பட்டுள்ளன. இந்த திருட்டுகளில் ஈடுபடும் நபர்கள் பெரும்பாலும் பணம் மற்றும் நகைகளையே இலக்காகக் கொண்டு செயல்படுவதாக தெரியவந்துள்ளது.
நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, Jura Kantonspolizei கன்டோன் முழுவதும் கண்காணிப்பை அதிகரித்துள்ளதாகவும், பொதுமக்களிடமிருந்து வரும் ஒவ்வொரு தகவலையும் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் அறிவித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான எந்த ஒரு நடவடிக்கையும் தவறவிடப்படாமல் கண்காணிக்கப்படுவதாக காவல் துறை உறுதியளித்துள்ளது.
இதேவேளை, திருட்டு சம்பவங்களைத் தடுக்க பொதுமக்கள் எளிய ஆனால் பயனுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என காவல் துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. வீடுகளை விட்டு வெளியேறும் போது, குறுகிய நேரமாக இருந்தாலும் கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் முறையாக பூட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இரவு நேரங்களில் சாளர மூடிகள் அல்லது திரைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். மதிப்புள்ள பொருட்களை வெளிப்படையாக வைக்காமல் பாதுகாப்பாக வைத்திருக்கவும், மிதிவண்டிகள் மற்றும் வெளிப்புற உபகரணங்களை முறையாக பூட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீண்ட காலம் வீட்டில் இல்லாத சூழலில், அண்டை வீட்டாருக்கு முன்கூட்டியே தெரிவித்து அவர்கள் கவனமாக இருக்க உதவுவது பயனுள்ளதாக இருக்கும். அத்துடன், சமூக ஊடகங்கள் அல்லது தொலைபேசி பதில் கருவிகளில் தங்களது விடுமுறை திதியை வெளிப்படையாக அறிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் காவல் துறை எச்சரிக்கை செய்துள்ளது. வாகனங்களும் எப்போதும் பூட்டப்பட்ட நிலையில் இருக்க வேண்டும் என்பதும் நினைவூட்டப்பட்டுள்ளது.
சந்தேகமான நபர்கள் அல்லது நடவடிக்கைகள் தென்பட்டால், உடனடியாக 117 என்ற அவசர எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து குற்றத் தடுப்பு அமைப்பின் இணையதளத்திலும் திருட்டு தடுப்பு தொடர்பான கூடுதல் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜூரா கன்டோனில் வசிக்கும் மக்களின் ஒத்துழைப்புக்கு காவல் துறை நன்றி தெரிவித்துள்ளதுடன், தொடர்ச்சியான விழிப்புணர்வே இந்த வகை குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான முக்கிய வழி என்றும் தெரிவித்துள்ளது.
© Kapo JURA