ஏப்ரல் மாதத்தில் சுவிட்சர்லாந்தில் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்
சுவிட்சர்லாந்தில் ஏப்ரல் மாதம் தொடங்குவதுடன் பல முக்கிய சட்ட மாற்றங்கள், விடுமுறை நாட்கள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் புதிய நடைமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. தீ பாதுகாப்பு விதிமுறைகள் முதல் ஐரோப்பிய எல்லை கண்காணிப்பு முறைமைகள் வரை பல மாற்றங்கள் இந்த மாதத்தில் நடைமுறைக்கு வரும் நிலையில், அவை பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல், பொதுமக்கள் செல்லும் இடங்களில் பைரோடெக்னிக் (Pyrotechnic) சாதனங்கள் பயன்படுத்துவதற்கு நாடு முழுவதும் தற்காலிகத் தடை விதிக்கப்படுகிறது. இந்த முடிவு, கடந்த ஜனவரி 1ஆம் தேதி வலைஸ் (Valais) கன்டோனில் உள்ள கிரான்ஸ்-மொண்டானா (Crans-Montana) நகரில் அமைந்திருந்த ஒரு பார் வளாகத்தில் ஏற்பட்ட கொடிய தீ விபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்டது. அப்போது சாம்பெயின் பாட்டில்களில் பயன்படுத்தப்பட்ட ஸ்பார்க்லர்கள் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, புதிய தீ பாதுகாப்பு விதிமுறைகள் தயாராகி வருகின்றன. அவை முழுமையாக 2027 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் அமலுக்கு வரவுள்ளன. அதுவரை, பொதுமக்கள் செல்லும் இடங்களில் இத்தகைய பட்டாசு மற்றும் தீப்பொறி சாதனங்களை பயன்படுத்துவதற்கு தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதே நாளான ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுவிட்சர்லாந்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் (Environmental Protection Act) மற்றும் ஒலி பாதுகாப்பு ஒழுங்குமுறை (Noise Protection Ordinance) ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தங்களும் நடைமுறைக்கு வருகின்றன. நகரங்கள் விரிவடையும் நிலையில், மக்கள் வாழும் பகுதிகளில் புதிய கட்டிடங்களை அமைப்பதற்கான அனுமதிகள் மற்றும் சத்தத்தைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் குறித்து தெளிவான சட்ட அடிப்படை உருவாக்குவது இந்த மாற்றங்களின் நோக்கமாகும். குறிப்பாக சத்தம் அதிகமாக இருக்கும் பகுதிகளிலும் கட்டிடங்கள் அமைப்பதற்கான திட்டங்களை எப்படி திட்டமிட வேண்டும் என்பது குறித்து இந்த புதிய விதிகள் தெளிவை வழங்குகின்றன.

இந்த ஆண்டில் ஈஸ்டர் திருநாள் ஏப்ரல் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதற்கு முன் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி Good Friday மற்றும் அதற்குப் பின் ஏப்ரல் 6ஆம் தேதி ஈஸ்டர் திங்கட்கிழமை (Easter Monday) ஆகியவை சுவிட்சர்லாந்தில் பெரும்பாலான பணியாளர்களுக்கு விடுமுறை நாட்களாகும். இதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கும் இந்த காலத்தில் விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால் இந்த விடுமுறை நாட்கள் ஒவ்வொரு கன்டோனிலும் மாறுபடும். உதாரணமாக, ஜெனீவா (Geneva) மற்றும் வோ (Vaud) கன்டோன்களில் பள்ளி விடுமுறை ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 17 வரை இருக்கும். பாசல் (Basel-City) கன்டோனில் மார்ச் 28 முதல் ஏப்ரல் 12 வரை விடுமுறை வழங்கப்படுகிறது. சூரிக் (Zurich) கன்டோனில் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 6 வரை மட்டுமே குறுகிய விடுமுறை வழங்கப்பட்டாலும், பின்னர் ஏப்ரல் 20 முதல் மே 1 வரை கூடுதல் வசந்த கால விடுமுறையும் வழங்கப்படுகிறது.
ஏப்ரல் 10ஆம் தேதி முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய டிஜிட்டல் எல்லை கண்காணிப்பு முறைமையான Entry/Exit System (EES) முழுமையாக அமலுக்கு வரும். இந்த முறைமை 2025 அக்டோபர் 12ஆம் தேதி முதல் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டது. சுவிட்சர்லாந்து உட்பட ஷெங்கன் (Schengen) பகுதியின் அனைத்து நாடுகளும் ஏப்ரல் 10க்குள் தங்களது எல்லைச் சோதனை நிலையங்களில் இந்த முறைமையை முழுமையாக செயல்படுத்த வேண்டும். இந்த அமைப்பு மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து வருகை தரும் பயணிகளின் நுழைவு மற்றும் வெளியேறும் தகவல்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும்.
ஏப்ரல் 15ஆம் தேதி முதல் பாசல்-முல்ஹூஸ்-பிரெய்புர்க் விமான நிலையம் (EuroAirport Basel-Mulhouse-Freiburg) அதன் முக்கிய ரன்வேயை புதுப்பிக்கும் பணிகளைத் தொடங்குகிறது. இந்தப் பணிகள் மே 20 வரை நடைபெறவுள்ளதால், விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பல விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. வழக்கமாக இந்த விமான நிலையத்தை பயன்படுத்தும் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த ஐந்து வார காலத்தில் சேவையை நிறுத்தியுள்ளன. இருப்பினும் EasyJet நிறுவனம் மட்டும் குறுகிய இரண்டாம் நிலை ரன்வேயை பயன்படுத்தி சில விமான சேவைகளை தொடர உள்ளது. வழக்கமான கோடை கால அட்டவணையை விட குறைந்த சேவைகள் மட்டுமே இயக்கப்படும். இதே நேரத்தில் சில விமான பயணங்களின் கட்டணங்கள் 1,682 சதவீதம் வரை அதிகரித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், ஏப்ரல் மாதத்துடன் சுவிஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் உள்ள பல ஸ்கீ விடுதிகள் இந்த ஆண்டுக்கான தங்கள் குளிர்கால விளையாட்டு பருவத்தை நிறைவு செய்யத் தயாராகின்றன. கிரௌவுண்டன் (Graubünden) கன்டோனில் உள்ள செயின்ட் மொரிட்ஸ்-கொர்விக்லியா (St. Moritz-Corviglia) மற்றும் வலைஸ் (Valais) கன்டோனில் உள்ள கிரான்ஸ்-மொண்டானா (Crans-Montana) ஆகியவை ஏப்ரல் 6ஆம் தேதி மூடப்படுகின்றன. ஏப்ரல் 12ஆம் தேதி ஆரோசா-லென்சர்ஹெய்டே (Arosa-Lenzerheide) ஸ்கீ மையம் பருவத்தை முடிக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி 4 வல்லேஸ் (4 Vallées) பகுதியில் உள்ள வெர்பியர் (Verbier), லா ட்சூமாஸ் (La Tzoumaz), நெந்தாஸ் (Nendaz), வேசொன்னாஸ் (Veysonnaz), தியோன் (Thyon) உள்ளிட்ட ஸ்கீ மையங்களும் மூடப்படுகின்றன.
அதே நாளில் லெ போர்ட்ஸ் டு சோலெய் (Les Portes du Soleil) பகுதியிலுள்ள மொர்சின் (Morzine), அவோரியாஸ் (Avoriaz), லெ கெட்ஸ் (Les Gets), சாடெல் (Châtel), மோர்ஜின் (Morgins) உள்ளிட்ட பகுதிகளும் பருவத்தை நிறைவு செய்கின்றன. மேலும் கிரிமென்ட்ஸ்-சினால் (Grimentz-Zinal) மற்றும் சாஸ்-ஃபே (Saas-Fee) ஆகியவைவும் ஏப்ரல் 19ஆம் தேதி மூடப்படுகின்றன. ஏப்ரல் 26ஆம் தேதி பெர்ன் (Bern) கன்டோனில் உள்ள கிளைனே ஷைடெக் – கிரிண்டெல்வால்ட்-வெங்கன் (Kleine Scheidegg – Grindelwald-Wengen) பகுதி சீசனை முடிக்கிறது. இறுதியாக ஏப்ரல் 30ஆம் தேதி லெ டியாப்லெரே (Les Diablerets) பகுதியில் உள்ள கிளேசியர் 3000 (Glacier 3000) இந்த குளிர்கால ஸ்கீ பருவத்தை நிறைவு செய்ய உள்ளது.
ஏப்ரல் மாதம் முழுவதும் அமலுக்கு வரும் இந்த மாற்றங்கள், சுவிட்சர்லாந்தில் வாழும் மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும், குறிப்பாக எல்லை கடந்து பயணம் செய்பவர்களுக்கும் முக்கியமானதாக இருக்கும். அதனால் இந்த புதிய விதிமுறைகள் மற்றும் மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து செயல்படுவது அவசியமாகும்.