மனைவியின் கள்ளத்தொடர்பை புகைப்படம் எடுத்த கணவருக்கு ஆர்காவ் நீதிமன்றம் தண்டனை
சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் (Aargau) கன்டோனில் உள்ள சோபிங்கன் (Zofingen) மாவட்ட நீதிமன்றம், தனது மனைவியின் தனிப்பட்ட தருணத்தை புகைப்படமாக எடுத்து அதை வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்களுக்கு அனுப்பிய 37 வயது நபருக்கு தண்டனை விதித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆர்காவர் சைடுங்க் (Aargauer Zeitung) செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் 2024 செப்டம்பர் மாதத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. குறித்த நபர் தனது பணியிட சகோதரரின் திருமண விழாவிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, முன்பு குடும்பத்துடன் வசித்த வீட்டின் அருகே சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நேரத்தில் அவர் மற்றும் அவரது மனைவி சுமார் ஒரு மாதமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கிடையிலான விவாகரத்து நடைமுறையும் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
அந்த வீட்டின் அனைத்து விளக்குகளும் எரிந்து கொண்டிருந்ததையும், தனது சகோதரரின் ஸ்கூட்டர் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்ததையும் பார்த்த அவர் சந்தேகத்துடன் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

வீட்டுக்குள் சென்றபோது, தனது மனைவி தனது சகோதரருடன் ஒரே படுக்கையில் இருந்ததை அவர் கண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் தனது கூறுகையை யாரும் நம்பமாட்டார்கள் என்ற எண்ணத்தில், அந்த காட்சியை புகைப்படமாக எடுத்தார். பின்னர் அந்த புகைப்படத்தை தனது பெற்றோர், மனைவியின் பெற்றோர் உள்ளிட்ட சுமார் ஒரு டஜன் நபர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.
பின்னர் அந்த புகைப்படத்தை உரையாடல்களில் இருந்து அவர் நீக்கியதாகவும், அது மேலும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் தன்னை மிகுந்த அவமானத்திற்குள்ளாக்கியதாகவும், குடும்பத்தினரின் முன்னிலையில் தன்னை கேலிக்குரிய நிலையில் நிறுத்தியதாகவும் கூறி அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.
இதற்குப் பிறகும், தனது குழந்தைகள் படிக்கும் முன்பள்ளி அருகே நடந்த வாக்குவாதத்தின் போது முன்னாள் மனைவியை மிரட்டியதாகவும் அந்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த சோபிங்கன் மாவட்ட நீதிமன்றம், சம்பவம் நடைபெற்றது உறுதியாக இருப்பதாகவும், அந்த புகைப்படத்தை அனுப்பிய செயல் “தனிப்பட்ட தனியுரிமைக்கு ஏற்பட்ட கடுமையான மீறல்” எனவும் தீர்மானித்தது.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் அந்த நபருக்கு 80 சுவிஸ் பிராங்க் வீதம் 90 நாள் அபராத அலகுகளைக் கொண்ட மொத்தம் 7,200 பிராங்க் மதிப்புள்ள இடைநிறுத்தப்பட்ட பணத் தண்டனையை விதித்தது. அதற்கு மேலாக 1,000 சுவிஸ் பிராங்க் அபராதமும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2,500 பிராங்க் நெறிமுறை இழப்பீடும் வழங்க உத்தரவிட்டது. மேலும் வழக்குச் செலவுகளையும் அவர் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இவ்வளவு விவகாரங்களுக்குப் பிறகும், இருவரும் தங்களுடைய குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் அமைதியான உறவை பேண முயற்சித்து வருகிறோம் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
© Keystone