மத்திய கிழக்கில் சிக்கியிருந்த சுவிஸ் குடிமக்கள் சிலர் சூரிச் வந்தடைந்தனர்
ஈரான் தொடர்பான பதற்றம் மற்றும் மோதல்களின் பின்னணியில் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவித்த சுவிட்சர்லாந்து குடிமக்கள் சிலரை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் சமீபத்தில் சூரிச் (Zürich) நகரை வந்தடைந்துள்ளது. இந்த விமானம் மத்திய கிழக்கில் இருந்து சுவிட்சர்லாந்தை வந்தடைந்த முதல் மீட்பு விமானமாகக் கருதப்படுகிறது.
ஈரான் தொடர்பான நிலைமைகளால் மத்திய கிழக்கின் பல நாடுகளில் சுமார் 5,000க்கும் அதிகமான சுவிஸ் குடிமக்கள் சிக்கியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவர்களை மீட்க சுவிஸ் அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனங்களும் சமீபத்தில் எழுந்திருந்தன.
இந்த சூழ்நிலையில் சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம் (Swiss International Air Lines) இயக்கிய விமானம் ஒன்று சூரிச் நகரிலிருந்து ஓமான் நாட்டிற்கு புறப்பட்டது. அந்த விமானம் ஓமானிலிருந்து 211 சுவிஸ் குடிமக்களை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் பிற்பகலில் மீண்டும் சூரிச் நகரை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, சுவிட்சர்லாந்திலிருந்து துபாய் நோக்கி நேரடி விமான சேவையை இயக்கும் திட்டம் எதுவும் இல்லையென கூறப்பட்டுள்ளது. அதனால் துபாயில் இருந்த பல சுவிஸ் குடிமக்கள் சாலை வழியாக ஓமான் நாட்டை வந்தடைந்த பின்னரே அந்த விமானத்தில் ஏறி சூரிச் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த பயணம் அரசின் இலவச மீட்பு நடவடிக்கையாக ஏற்பாடு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த விமானத்தில் பயணித்தவர்கள் ஒவ்வொருவரும் சுமார் 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கி பயணித்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அப்பகுதியில் வசிக்கும் அல்லது அங்கு பயணித்திருந்த சுவிஸ் குடிமக்களை பாதுகாப்பாக நாடு திரும்பச் செய்வது குறித்து அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக இன்னும் அரசியல் மற்றும் பொதுமக்கள் இடையே விவாதம் தொடர்கிறது.