சுவிஸ் எல்லைக்குள் கார் ஓட்டிய இத்தாலியப்பெண்ணுக்கு நடந்த சம்பவம்
இத்தாலியின் கோமோ (Como) நகரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சுவிட்சர்லாந்தின் மோட்டார் வீதியில் (Autobahn) பயணித்ததற்காக 200 சுவிஸ் ஃப்ராங்க் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த பெண் தனக்கு நடந்தது ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்து வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,
இந்த சம்பவம் டிசினோ (Tessin/Ticino) மாகாணத்தில் உள்ள பிறோனிகோ (Bironico) பகுதியில் நிகழ்ந்தது. கோமோ நகரை சேர்ந்த அந்த இத்தாலிய பெண் தற்செயலாக சுவிட்சர்லாந்து எல்லைக்கு உட்பட்ட A2 மோட்டார் வீதியில் நுழைந்துவிட்டார். தாமாகவே வழியிழந்ததை அவர் உடனே உணர்ந்தார் என்றும், சுமார் 9 கிலோமீட்டர் தூரம் பயணித்த பின்பு அருகிலுள்ள வெளியேறும் பாதையினூடாக பயணத்தை மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெளியேறியதும், மெலிடே (Melide) வழியாக செல்லும் பகுதியில் டிசினோ போலீசாரால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதற்கான காரணம்: அவர் வாகனத்தில் சுவிஸ் மோட்டார் வீதி ‘விக்னெட்டை’ (Autobahnvignette) ஒட்டவில்லை. சுவிஸ் மோட்டார் வீதியில் பயணிக்க, ஆண்டுக்கு 40 சுவிஸ் ஃப்ராங்க் மதிப்புள்ள விக்னெட்டை வாகனத்தில் ஒட்டுதல் கட்டாயமாகும்.
இந்த தவறு குறித்து அவர் போலீசாரிடம் விளக்கம் அளித்தாலும், அதிகாரிகள் தயவோ கருணையோ காட்டவில்லை. மாற்றாக, “நாங்கள் ஏமாற வரவில்லை. பணம் இல்லை என்றால், யாரையாவது அழையுங்கள். இல்லையெனில் வாகனம் பறிமுதல் செய்யப்படும்” என பதிலளித்தனர் என்று அந்த பெண் கூறுகிறார். போலீசாரின் கடுமையான அணுகுமுறையும், உணர்வற்ற நடத்தை தொடர்பில் தனக்கு கவலையளிப்பதாகவும் குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
“இது உண்மையில் ஒரு தவறுதலாக நடந்த விஷயம். ஆனால், இந்த 9 கிலோமீட்டருக்காக 200 ஃப்ராங்க் அபராதம் விதிக்கப்படுவது மிகை,” என்று அவர் வேதனையுடன் கூறுகிறார். அதுமட்டுமன்றி, “சுவிஸ் சாரதிகள் இத்தாலியில் எத்தனை விதமான விதி மீறல்களைச் செய்கிறார்கள். அவர்களுக்கு இப்படி கடுமையான அபராதம் விதிக்கப்படுவதில்லை,” என்றும் குற்றம்சாட்டுகிறார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் பலர் அந்த இத்தாலிய பெண்ணின் நிலையைப் புரிந்து கொள்ளவில்லை. ஒருவர், “சட்டத்தை தெரியாதது தவிர்க்கக்கூடிய காரணமா?” என்று கேட்கிறார். மற்றொருவர், “கோமோவிலிருந்து சுவிட்சர்லாந்து செல்ல விக்னெட் தேவை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே” என்கிறார்.
சிலர், சுவிட்சர்லாந்தின் சட்டங்கள் மிக கடுமையாகவே உள்ளன என்றும், அங்கே தவறு செய்தால் தப்பிக்க வாய்ப்பில்லை என்பதையும் குறிப்பிடுகின்றனர். இந்த சம்பவம், சுவிட்சர்லாந்தில் வாகன விதிகள் எவ்வளவு கடுமையாக பின்பற்றப்படுகின்றன என்பதை உணர்த்தும் ஒரு எடுத்துக்காட்டாகும். சட்டங்களைத் தவிர்க்கும் எந்தவொரு முயற்சியும் பொருட்படுத்தப்படாது என்பதையும் இது வெளிப்படுத்துகிறது.
@KeystoneSDA