சுவிஸ் வங்கிகளில் நான்கு ஆண்டுகளில் இல்லாத கடும் சரிவு! சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், இந்திய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் நிறுத்தப்பட்டுள்ள நிதி 70 சதவீதம் கடுமையாக சரிந்துள்ளது.
இந்திய வாடிக்கையாளர்களின் டெபாசிட் கணக்குகள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற வங்கிக் கிளைகள் மூலம் வைத்திருக்கும் நிதி கணிசமாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, 2023ஆம் ஆண்டில் இந்தியர்களின் நிதி மற்றும் நிறுவனங்களால் நிறுத்தப்பட்டுள்ள நிதி 70 சதவீதம் கடுமையாக சரிந்துள்ளது.

இதனால் 4 ஆண்டுகளில் இல்லாத அளவு 1.04 பில்லியன் சுவிஸ் பிராங்குகளாக (ரூ.9,771 கோடி) நிதி சரிந்துள்ளதாக, சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கியின் வருடாந்திர தரவு காட்டியுள்ளது.
ஆனால், சுவிஸ் தேசிய வங்கிக்கு (SNB) வங்கிகளால் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் மற்றும் சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் வைத்திருப்பதாகக் கூறப்படும் கருப்புப் பணத்தின் அளவு குறிப்பிடப்படவில்லை.

கடந்த 2006ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில், 6.5 பில்லியன் சுவிஸ் பிராங்க் அளவுக்கு இந்தியர்களின் பணம் இருந்ததே அதிகபட்சம் ஆகும்.
சுவிஸ் வங்கிகளில் உள்ள வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பணத்திற்கான தரவரிசையில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.
இந்த புள்ளி விவரங்களில், மூன்றாம் நாடு வழியாக கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் உள்ளிட்டோரின் கணக்கு விவரங்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்று சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்துள்ளது.