சுவிட்சலாந்து பேர்ன் வள்ளுவன் தமிழ்ப்பள்ளி முதல்வர் மணிவிழா.!! சுவிட்சலாந்து பெர்ன் வள்ளுவன் தமிழ்ப்பள்ளி முதல்வர் பூநகரி பொன். முருகவேள் மணிவிழா சிறப்பாக கொண்டாடப் பெற்றது.
சுவிட்சலாந்து பேர்ன் நகரில் வள்ளுவன் தமிழ்ப்பள்ளியின் அமைப்பாளர், வரலாற்று நாயகன் செந்தமிழ் ஆசான் பூநகரி நற்றமிழர் பொன் முருகவேள் அவர்களின் அறுபதாம் ஆண்டு மணிவிழா சான்றோர்கள், தலைவர்களின் வாழ்த்துரைகளுடன் மிகச் சிறப்பாக நடந்தேறியது .
பூநகரியான் முருகவேள் அவர்கள் திருக்குறள் நெறியையும் தமிழ்ப்பற்றையும் ஊட்டி மாணவர் பலரை உருவாக்கிய பெருமைக்குரியவர் அத்துடன் சுவிசு போலும் மேற்கத்திய நாடுகளில் தமிழ்மொழிப் பாடத்தை மழலையர் முதலாகவே குழந்தைகளுக்கு முறையாகப் படிப்பிக்கச் செய்து பலரையும் எழுத படிக்க வைத்த பெருமை முருகவேள் அவர்களையே சாரும்.

கடந்த 24.09.2023 ஆம் நாள் பேர்ன் தெல் சால் , ஓஸ்டர்முண்டிகன் மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணி அளவில் இவ்விழா சிறப்பாக நடந்தேறியது. இவ்விழா நாயகருக்குத் தமிழ்நாட்டு முதலமைச்சர் மேன்மைமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் சிறப்பு வாழ்த்துச் செய்தி வழங்கியதும் குறிப்பிடத் தக்கதாகும்.
“வள்ளுவரைப் போற்றுவதுடன் நிற்காமல், அவர் பெயரால் கல்வி நிலையத்தை சுவிட்சர்லாந்து நாட்டிலேயே தொடங்கி, தொடர்ந்து தமிழ்த் தொண்டாற்றி, “சுவிட்சர்லாந்தும் தமிழர்களின் குடியேற்றமும்” என்ற ஆய்வு நூல், “பூநகரிப் பூங்கா, பூமியில் ஒரு புதையல் பூநகரி ” என்ற அவர் பிறந்த மண்ணின் பெருமைகளைப் பேசும் நூல் உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் படைத்துள்ளார்.
திரு. பொன். முருகவேள் அவர்களின் தமிழ்ப்பணி என்றென்றும் தொடரட்டும் ! தமிழ் இவர் தொண்டால் மென்மேலும் சிறக்கட்டும்” என முதல்வர் வாழ்த்துரை வழங்கியுள்ளார். விழாவின் தொடக்கத்தில் ஐயன் திருவள்ளுவரின் உருவம் பல்லக்கில் மாணவர்களால் ஊர்வலமாகக் கொணரப்பெற்று சிறப்புச் செய்யப்பெற்றது.
மலேசியாவிலிருந்து மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவரும் வேர்ச்சொல் ஆய்வாளரும், கலைச்சொல்லாக்க வல்லுநருமாகிய இரா.திருமாவளவன் அவர்கள் செந்தமிழ் மரபில் திருக்குறள் ஓதி மலர்மாலை மாற்றல் நிகழ்ச்சியை இனிய தமிழில் சிறப்புற நடத்தி வைத்தார்.
இவ்விழாவில் பல்லாண்டு காலமாகத் தமிழ்பணி, மக்கள் நலப்பணி, கலைப்பணி , தமிழாசிரியப் பணி நிகழ்த்திய பலருக்கு விருது வழங்கிச் சிறப்பு செய்யப்பெற்றது.
மலேசியா, இத்தாலி, பிரான்சு, டென்மார்க், யேர்மன் முதலான நாடுகளிலிருந்து பலரும் இவ்விழாவில் கலந்து முருகவேள் அவர்களை வாழ்த்திச் சிறப்பு செய்தனர். இவ்விழாவில் வள்ளுவன் பாடசாலை மாணவர்களின் படைப்புகளும் உணர்வுமிக்க ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் அரங்கேறின.
இல்லற வாழ்வில் சிறப்புற வாழ்ந்து பேர்ன் தமிழ் மக்களுக்குப் பல்வேறு உதவிகளையும் புரிந்து, வள்ளுவன் பாடசாலையையும் அரசு ஏற்புடன் திறம்பட நடத்தி உலகத் தமிழ் மக்களிடையேயும் நன்மதிப்பைப் பெற்றுள்ள பொன். முருகவேள் நந்தினி இணையரும் அவர்தம் நன்மக்களும் மேலும் மேலும் சிறப்புகள் பல பெற்று நெடினிது வாழ்கவென பலரும் வாழ்த்தியுரைக்க விழா சிறப்புடன் நிறைவடைந்தது.
மணி விழாவின் அன்று சிறுவர்களுக்காக தனியாக ஓர் சிறிய மண்டபம் ஒதுக்கப்பட்டு அவர்களுக்கான படம்வரைதல், நிறந்தீட்டுதல்,உருவங்களைச் செய்தல்,உருவங்களை வரைந்து வெட்டுதல் என பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.