சுவிட்சர்லாந்து வங்கிகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள்
சுவிட்சர்லாந்தின் அரசாங்கம், நாட்டின் முக்கிய வங்கிகளின் ஒழுங்குமுறைத் தன்மையை பலப்படுத்தும் நோக்கத்தில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. வங்கித் தலைமை அதிகாரிகள் மீது நேரடி பொறுப்பியல் விதிக்கப்படும் புதிய நடைமுறைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம், UBS, Raiffeisen, Postfinance, Zurich Cantonal Bank போன்ற முக்கிய வங்கிகளுக்கு அதிகப்படியான மூலதனத் தேவைகளை விதிக்க முனைந்துள்ளது. வெளிநாட்டு துணை நிறுவனங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தாயக வங்கியில் இழப்புக்களை ஏற்படுத்தாத வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

வங்கிகளின் ஒழுங்குமுறை நிறுவனமான FINMA-வுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளது. வங்கிகள் தவறான நடைமுறைகளை பின்பற்றும் பட்சத்தில், நேரடியாக தண்டனைகள் விதிக்கும் சாத்தியமும் ஏற்படும். மேலும், ஒவ்வொரு வங்கியும் எந்த அதிகாரி எதற்குப் பொறுப்பு என்பதைக் குறிப்பிட்ட ஆவணங்களை தயார் செய்ய வேண்டிய வகையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
“போனஸ் முழுமையாக நீக்கப்படவேண்டும்” என்கிற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. ஏனெனில், போனஸ்களை நீக்கினால் நிரந்தர ஊதியங்கள் உயரும் வாய்ப்பு இருப்பதாகவும், அது நிதி நிறுவனங்களின் நிலைத்தன்மையை பாதிக்கக்கூடும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2027 ஜனவரியில் இந்த விதிமுறைகள் அமலில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
@tamilnews