தந்தை கைவிட்ட நிலையில், ஏழ்மையில் சிக்கித்தவித்த ஒரு பெண், பின்னாட்களில் ஒரு நடிகையாக புகழின் உச்சியை அடைந்தார்.
சுவிட்சர்லாந்தில் குடியமர்ந்த அவர், அண்மையில் தனது 90ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். சுவாரஸ்யம் மிகுந்த அவரது வாழ்வைக் குறித்த சில தகவல்களைக் காணலாம்.
சோபியா லோரன் (Sophia Loren) என அழைக்கப்படும் Sofia Costanza Brigida Villani Scicolone, 1934 ஆம் ஆண்டு இத்தாலியின் தலைநகரான ரோமில் பிறந்தார்.
அவரது தந்தையான Riccardo Scicolone Murillo, சோபியாவின் தாயாகிய Romilda Villaniயை இரண்டு குழந்தைகளுக்கு தாயாக்கிவிட்டு அவரை திருமணம் செய்ய மறுத்ததுடன், கைவிட்டும் சென்று விட்டார்.

ஏழ்மையில் சிக்கித்தவித்த சோபியா, தனது 16ஆவது வயதில் மிஸ் இத்தாலி போட்டியில் பங்கேற்க, இறுதி மூன்று போட்டியாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுதான், அவரது புகழுக்கு வாசலை திறந்துவிட்டது!
சின்னச் சின்ன வேடங்களில் திரைப்படங்களில் தலைகாட்டிய சோபியாவின் பெயரை சோபியா லோரன் என பெயர் மாற்றம் செய்தவர் பிரபல தயாரிப்பாளரான கார்லோ போன்டி (Carlo Ponti) என்பவர்.
பின்னர் படிப்படியாக திரைப்படங்கள் கிடைக்க, 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், ஏராளமான விருதுகள் என, புகழின் உச்சிக்கே சென்றார் சோபியா.
ரோமில் பிறந்தாலும், சுவிட்சர்லாந்துதான் என்வீடு என்கிறார் சோபியா. அதற்குக் காரணம், குழந்தைகள் மீது கொள்ளை ஆசை கொண்ட சோபியா கார்லோ தம்பதியருக்கு குழந்தைகள் பிறக்காததால் கவலையில் வாடியிருந்தார் சோபியா.
அப்போது ஜெனீவா பல்கலை பேராசிரியரான Hubert de Watteville என்பவர்தான் சோபியாவுக்கு சிகிச்சையளித்து, அவர் இரண்டு பிள்ளைகளை நல்லபடியாக பெற்றெடுக்க உதவினார். ஆகவேதான் சுவிட்சர்லாந்திலேயே இன்னமும் வாழ்ந்துவருகிறார் சோபியா.