இந்தியா உட்பட 74 நாடுகளுடன் கிரிப்டோ ஒப்பந்தம் செய்யும் சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து, இந்தியா மற்றும் மற்ற 73 நாடுகளுடன் கிரிப்டோ சொத்துக்களுக்கான Automatic Exchange of Information (AEOI) ஒப்பந்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் வெளிநாடுகளில் அறிக்கை செய்யப்படாத கிரிப்டோ நிதிகளை இந்திய அரசு கண்டறிய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே வங்கிக் கணக்குகள் மற்றும் மற்ற நிதி சொத்துகளுக்கான வருடாந்திர தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செயல்பட்டு வருகிறது.
அதே மாதிரியாக, தற்போது கிரிப்டோ சொத்துகளுக்கான AEOI உடன்படிக்கை வந்தால், வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட நிதிகளைத் துல்லியமாக கண்டறியும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

இந்த ஒப்பந்தம் 2026 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரவிருக்கிறது, மற்றும் முதல் தகவல் பரிமாற்றம் 2027-ல் நடைபெறும் என சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது. இந்தியாவில் கிரிப்டோ நாணயங்கள் குறித்த தெளிவான சட்டங்கள் இல்லை, ஆனால் மற்றநாடுகளில் இவை சட்டபூர்வமான நாணயங்களாக உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ந்து நிதி நிலைத்தன்மைக்கு ஆபத்தானவை என எச்சரித்து வருகிறது.
இந்தியர்களால் கிரிப்டோவில் பதுக்கப்பட்டிருக்கக்கூடிய பாரிய அளவிலான நிதி இருப்பு குறித்து அதிகாரப்பூர்வ மதிப்பீடு இல்லை, ஆனால் தானாக நிகழும் தகவல் பரிமாற்றம் அதை வெளிக்கொணர உதவும்.